
நெய் கடலை:
நம நமவென்று இருக்கும் வாய்க்கு ஏதாவது கரகரவென்று மென்று கொண்டிருக்கனும்போல் ஆசைப்பட்டால் சட்டென்று நம் ஞாபகத்திற்கு வருவது நெய் கடலைதான்.
கடலைப்பருப்பு கால் கிலோ
பூண்டு 10 பற்கள்
கருவேப்பிலை 2 கைப்பிடி
மிளகாய்த் தூள் 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
சமையல் சோடா 1/4 ஸ்பூன்
உப்பு தேவையானது
பெருங்காயத்தூள் கால் ஸ்பூன்
எண்ணை பொரிக்க
கடலைப்பருப்பை சிறிது சமையல் சோடாவுடன் சேர்த்து 2 மணிநேரம் ஊறவிடவும். சமையல் சோடா கடலைப்பருப்பை நன்கு மென்மையாக்கும். பொரிக்கும்பொழுது கரகரப்புடன் மிகவும் ருசியாக இருக்கும். நன்கு ஊறிய கடலைப்பருப்பை இரண்டு மூன்று முறை கழுவி நீரை வடிகட்டவும். இதனை ஒரு மென்மையான காட்டன் துணியில் பரப்பிப் போட்டு நன்கு உலரவிடவும். வெயிலில் காய வைக்க வேண்டாம். ஈரப்பதம் போனதும் எடுத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் வைத்து நன்கு காய்ந்ததும் போட்டு பொரித்தெடுக்கவும். அதே எண்ணெயில் நசுக்கிய பூண்டு பற்களையும், கறிவேப்பிலையையும் பொரித்து தனியாக வைக்கவும். இப்பொழுது ஒரு அகலமான பாத்திரத்தில் வறுத்த கடலைப்பருப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயத்தூள், உப்பு, பொரித்த பூண்டு, கருவேப்பிலை அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும். நெய் கடலை தயார். இதனை காற்று போகாத டப்பாவில் போட்டு வைக்கவும். கரகர மொறு மொறு ஸ்னாக்ஸ் ரெடி.
சாக்லேட் சேமியா பர்ஃபி:
சாக்லேட் 100 கிராம்
பால் அரை லிட்டர்
சர்க்கரை ஒரு கப்
சேமியா வறுத்தது ஒரு கப்
முந்திரி பருப்பு 10
நெய் 4 ஸ்பூன்
ஏலக்காய் பொடி 1/2 ஸ்பூன்
பாலை 1 கப் அளவில் சுடவைத்து அதில் சாக்லேட் போட்டு கரைய விடவும். பாலில் சேமியாவை வேகவிட்டு அதில் அந்த சாக்லேட் கலவையைக் கலந்து தேவையான சர்க்கரை, நெய், ஏலக்காய் பொடி போன்றவற்றை சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக் கிளறவும். வாணலியில் ஒட்டாமல் வரும் பதம் வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும். மிகவும் ருசியான சாக்லேட் சேமியா பர்ஃபி தயார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை விரும்பி சாப்பிடுவார்கள். செய்துதான் பாருங்களேன்!