
பாசிப்பருப்பு பரோட்டா
தேவை:
பாசிப்பருப்பு - 1 கப்
கோதுமை மாவு - 2 கப்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை:
பாசிப்பருப்பை இரண்டு மணிநேரம் ஊறவைத்து கொள்ளவும்.
கோதுமை மாவை உப்பு மற்றும் மிளகாய் பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதனுடன் ஊறவைத்த பாசிப்பருப்பை கலந்து மீண்டும் பிசைந்து கொள்ளவும்.
பிறகு பிசைந்த மாவை பரோட்டாவாக தேய்த்து வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த பரோட்டாவை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
சுவையான பாசிப்பருப்பு பரோட்டா தயார்.
******
பாசிப்பருப்பு இனிப்பு இட்லி
தேவை:
பாசிப்பருப்பு - ஒரு கப், பச்சரிசி - கால் கப்,
வெல்லத் தூள் - ஒரு கப்,
தேங்காய் துருவல் - அரை கப்,
ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன்,
நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை:
பாசிப்பருப்பு, பச்சரிசி இரண்டையும் தனித்தனியே ஒரு மணிநேரம் ஊற வையுங்கள். பிறகு சற்று கரகரப்பாக அரைத்தெடுங்கள். அரைத்த மாவுடன் தேங்காய்த் துருவல், வெல்லத் தூள், ஏலக்காய், பாதியளவு நெய் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். நெய் தடவிய இட்லி தட்டில் ஊற்றி நன்கு வேகவைத்தெடுங்கள். சுவையான சத்தான பாசிப்பருப்பு இனிப்பு இட்லி ரெடி.
******
பாசிப்பருப்பு கேக்
தேவை:
பாசிப்பருப்பு - கால் கிலோ
தேங்காய் பால் - ஒரு கப்
பால் பவுடர் - அரை கப்
தேங்காய் துருவல் -அரை கப்
முந்திரிப் பருப்பு - 8
நெய் - தேவைக்கேற்ப
சர்க்கரை - 150 கிராம்
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் பாசிப்பருப்பை வறுத்துக் கொள்ளவும். அதன் பின்பு வறுத்த பாசிப்பருப்பை அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்பு அதனுடன் தேங்காய்ப் பால் மற்றும் முந்திரிப்பருப்பை சேர்த்து நன்றாக அரைக்கவும்.
பின்பு வட்டமான தட்டில் லேசாக நெய்யை தடவவும்.
பிறகு 5 டேபிள் ஸ்பூன் நெய்யை வாணலியில் ஊற்றி அரைத்த பாசிப்பருப்பு, பால் பவுடர், தேங்காய் துருவல், சர்க்கரை எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கிளறவும். அவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறிய பிறகு துண்டுகள் போடவும். சுவையான பாசிப்பருப்பு கேக் தயார்!
*******
பாசிப்பருப்பு பெஸரட்
தேவை:
பாசிப்பருப்பு - 2 கப்
வெந்தயம் - 2 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் -1
பச்சை மிளகாய் - 3
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
பாசிப்பருப்பு, வெந்தயம் இரண்டையும் ஆறு மணிநேரம் நீரில் ஊற வைத்து, நீரை வடித்து, நீர் சேர்க்காமல், உப்பு சேர்த்து அரைக்கவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி போடவும். மாவை தோசைக் கல்லில் ஊற்றி, தோசையாக வார்க்கவும். பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயத்தை தோசையின் மேல் பரவலாக தூவி, வெந்ததும் எடுத்தால், சுவையான, சத்தான பெசரட் தயார்.
*******
பாசிப்பருப்பு பணியாரம்
தேவை:
பச்சரிசி - அரை கிலோ
பாசிப்பருப்பு - அரை கப்
வெல்லம் - கால் கிலோ
ஏலக்காய் தூள் - அரை ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
பச்சரிசியை களைந்து இரண்டு மணிநேரம் ஊறவைத்து, நீரை வடித்து விட்டு, நிழலில் உலரவைத்து மாவாக்கிக் கொள்ளவும். பாசிப்பருப்பை களைந்து வேகவைக்கவும். கனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு நீர் விட்டு கொதிக்கவைத்து, வெல்லம் கரைந்ததும் வடிகட்டவும். அதை கம்பி பாகு பதத்தில் காய்ச்சி இறக்கி வைக்கவும். மாவில் வெந்த பாசிப்பருப்பு, பாகு, ஏலக்காய் தூள் போட்டு பணியார மாவு பதத்தில் நீர் விட்டு கரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மாவை கரண்டியால் எடுத்து ஊற்றவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து வைக்கவும். சுவையான இனிப்பு பாசிப்பருப்பு பணியாரம் தயார்.