மண மணக்கும் திடீர் பூண்டு பொடி!
அதிக வேலை இருக்கும்போது குழம்பு ரசம் வைப்பதற்கு சோம்பலாக இருக்கும். அப்போது நமக்கு கை கொடுப்பவை பெரும்பாலும் பொடி வகைகள்தான். அதிலும் வாய்வு, வயிற்று உப்புசம் போன்ற பல உடல் உபாதைகளை தீர்க்கும் பூண்டு பொடி என்றால் இன்னும் சிறப்பு.
பூண்டில் பொடி செய்து அதை சூடான சோற்றில் போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து உடன் பொரித்த அப்பளத்துடன் சாப்பிட்டால் உண்மையில் தேவாமிருதம் போல் இருக்கும். இரண்டே நிமிடத்தில் வீட்டில் பூண்டு பொடி எப்படி செய்வது? இதோ எளிதான பூண்டுப் பொடி ரெசிபி உங்களுக்காக..
தேவையானவை:
பூண்டு - 6 பற்கள்
பொட்டுக்கடலை - 2 ஸ்பூன்
வரமிளகாய்- 2
தேங்காய் - 1 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
சொத்தைகளற்ற தரமான பூண்டுகளை தோலுரித்து வைக்கவும். ஒரு வாணலியில் துருவிய தேங்காய் மற்றும் வரமிளகாயை வறுத்துக் கொள்ளவும். இப்போது ஒரு மிக்சியில் பூண்டுகளுடன் பொட்டுக்கடலை தேங்காய் மிளகாயுடன் தேவையான உப்பு சேர்த்து சுழற்றி ஒன்றிரண்டு எடுக்கவும். சூப்பரான மண மணக்கும் பூண்டுப் பொடி ரெடி. இதற்கு உருக்கிய நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிடலாம். பொடி அதிகம் இருந்தால் பூண்டில் இருக்கும் நீர்த்தன்மை ஆறியதும் டப்பாவில் இட்டு இரண்டு நாட்கள் பயன்படுத்தலாம்.
குறிப்பு - பூண்டுகளைக் கழுவினால் நீரைத் துடைத்துப் பின் போடவும். உடன் சிறிது எள்ளையும் விருப்பப்பட்டால் வறுத்து சேர்க்கலாம். வித்தியாசமான சுவை தரும்.