மணக்கும் மஷ்ரூம் ரைசும், நாவிற்கு ருசியான பன்னீர் கேப்ஸிகம் குருமாவும்!

Mushroom Rice and Paneer Capsicum Kuruma
samayal tips
இந்திராணி தங்கவேல்

என் பெயர் இந்திராணி தங்கவேல். சொந்த ஊர் தஞ்சாவூர். வசிப்பது சென்னையில் உள்ள மாடம்பாக்கம். சிறு வயது முதலே எழுத வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருந்தது. ஆதலால் முதன்முதலாக மங்கையர் மலருக்கு ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன். அது பிரசுரமாகியதால் அதிலிருந்து எழுதத் தொடங்கினேன். இன்று பாரம்பரியமிக்க கல்கி குழும பத்திரிகைகளில் எழுதி வருகிறேன். அது எனக்கு மன நிறைவு தருகிறது.

Updated on

மஷ்ரூம் ரைஸ்

செய்ய தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி- ஒரு டம்ளர்

காளான் -15

இஞ்சி, பூண்டு பேஸ்ட் -ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகு, சீரகப்பொடி -ஒரு டீஸ்பூன்

பெரிய வெங்காயம் நறுக்கியது- ஒன்று

நறுக்கிய தக்காளி- ஒன்று

தனியா, புதினா ,கருவேப்பிலை பொடியாக நறுக்கியது- கைப்பிடி அளவு

மிளகாய்ப் பொடி -ஒரு டீஸ்பூன்

மஞ்சள் பொடி -கால் டீஸ்பூன்

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

பட்டை, சோம்பு, கிராம்பு, பிரிஞ்சி இலை -தாளிக்க தேவையான அளவு

செய்முறை:

காளானை சுத்தம் செய்து ஒரு காளானை இரண்டு துண்டு வீதம் நறுக்கிவைக்கவும். பாஸ்மதி அரிசியைக் கழுவிவைக்கவும்.

குக்கரை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய்விட்டு, எண்ணெய் காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளிக்கவும். பின்னர் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும்.

வதங்கிய பின்னர் மிளகு, சீரக பொடி, மஞ்சள் பொடி, மிளகாய் தூள், நறுக்கி வைத்த மல்லி கருவேப்பிலை, காளான் அனைத்தையும் நன்றாக ஒரு வதக்கு வதக்கி மசாலாவின் பச்சை வாடை போனவுடன் பாஸ்மதி அரிசி சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு, ஒன்னே முக்கால் டம்ளர் தண்ணீர் விட்டு வேகவிடவும். பின்னர் ஏழு நிமிடம் கழித்து மூன்று சவுண்டு வந்தவுடன் குக்கரை அணைத்து விடவும். மணக்க மணக்க உதிர் உதிரான காளான் ரைஸ் தயார்.

பன்னீர் கேப்ஸிகம் குருமா

செய்ய தேவையான பொருட்கள்:

பன்னீர் -200 கிராம்

பெரிய வெங்காயம் நீளமாக நறுக்கியது- 2

தக்காளி -ஒன்று நறுக்கியது

கேப்ஸிகம் மெலிதாக நீளமாக நறுக்கியது- இரண்டு

பச்சை பட்டாணி, கேரட், காலிபிளவர் ,பீன்ஸ் எல்லாம் ஆக சேர்த்து நறுக்கியது -ஒரு கப்

பச்சை மிளகாய் நறுக்கியது- இரண்டு

மல்லித்தழை நறுக்கியது -கைப்பிடி அளவு

மிளகாய்த் தூள் -ஒரு டேபிள் ஸ்பூன்

தேங்காய்த் துருவல்- இரண்டு டேபிள் ஸ்பூன்

கசகசா- அரை டீஸ்பூன்

சோம்பு- ஒரு டீஸ்பூன்

பாதாம் முந்திரி தலா- 3

பொட்டுக்கடலை -ஒரு டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் -தேவையான அளவு

தாளிக்க: சோம்பு, பட்டை, அன்னாசிப் பூ

இதையும் படியுங்கள்:
வித விதமான சத்து நிறைந்த பொரியல் வகைகள்!
Mushroom Rice and Paneer Capsicum Kuruma

செய்முறை:

கசகசா, சோம்பு, பொட்டுகடலை மூன்றையும் வெறும் வானலியில் வறுத்து அதனுடன் தேங்காய், பாதாம், முந்திரிப் பருப்பு அனைத்தையும் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.

பன்னீரை தேவையான அளவுக்கு சதுரமாக வெட்டி தோசை தவாவில் சிறிதளவு எண்ணெய்விட்டு துண்டங்களை அதில் சேர்த்து பொன்னிறமாக வறுத்து வைத்து விடவும். கேப்ஸிகத்தை எண்ணெயில் நன்றாக வதக்கி வைத்துவிடவும்.

அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளிக்கவும். பின்னர் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் காய்கறிகளையும் சேர்த்து மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி,, சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு போட்டு வேகவிடவும்.

வெந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை கரைத்து ஊற்றி கலந்து கொதிக்கவிடவும். கொதித்த பின்பு வதக்கிய கேப்சிகம் மற்றும் பன்னீரை அதில் சேர்த்து நன்றாக கிளறி ஒரு கொதிவிட்டு இறக்கி பொடிதாக அரிந்த மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும் .சப்பாத்தி, ஃப்ரைடு ரைஸ், இடியாப்பம், கோதுமை புட்டு, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com