

தஞ்சாவூர் மோர் குழம்பு, திருநெல்வேலி மோர் குழம்பு மாதிரி இந்த கொங்கு நாட்டு ஸ்பெஷல் மோர் குழம்பு சுவையில் அசத்தலாக இருக்கும். வெங்காயம், இஞ்சி போன்ற மசாலா பொருட்கள் சேர்த்து செய்யும் மணமான, ருசியான மோர் குழம்பு இது.
தேவையான பொருட்கள்:
வெள்ளை பூசணி துண்டுகள் ஒரு கப்
தயிர் 2 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
பச்சை மிளகாய் 2
வர மிளகாய் 3
தனியா ஒரு ஸ்பூன்
இஞ்சி சிறு துண்டு
சீரகம் 1/2 ஸ்பூன்
பூண்டு 2 பற்கள்
உப்பு தேவையான அளவு
தாளிக்க: கடுகு, கடலைப்பருப்பு, வர மிளகாய் 1, கருவேப்பிலை சிறிது, வெங்காயம் 1/2 பொடியாக நறுக்கியது.
முதலில் வெள்ளை பூசணி துண்டுகளை ஒரு கப் தண்ணீர், தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
தயிரை நன்கு கடைந்து கொள்ளவும். மிக்ஸியில் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், வரமிளகாய், தனியா, இஞ்சி, சீரகம், பூண்டு ஆகியவற்றை சிறிது நீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
கடைந்த தயிரில் அரைத்த விழுதை சேர்த்து வாணலியில் கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் 1 கிள்ளி சேர்த்து நல்லெண்ணெய் விட்டு கடுகு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் 1/2 சேர்த்து நன்கு வதக்கி கெட்டி மோரில் சேர்க்கவும். இப்பொழுது வேக வைத்துள்ள பூசணி துண்டுகளையும் சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து சுட வைக்க (கொதிக்க விட வேண்டாம்) ருசியான கொங்கு நாட்டு ஸ்பெஷல் மோர்க்குழம்பு தயார்.
சுவையான இந்த மோர்க்குழம்பை சூடான சாதத்துடன் சிறிது நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட அலாதியான ருசியுடன் இருக்கும்.