

நெல்லிக்காயில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. நெல்லிக்காய் இரத்த சர்க்கரை அளவை கட்டுப் படுத்துகிறது. உடலின் நச்சுக்களை வெளியேற்றுகிறது. நெல்லிக்காயில் உள்ள கரோட்டின் கண் புறை பிரச்னையைத் தடுக்கிறது.
மேலும் நெல்லிக்காயில் அதிக அளவு ஆன்ட்டி ஆக்சிடென்ட் இருப்பதால் முன்கூட்டியே கூந்தல் நரைப்பதைத் தடுக்கிறது. சரும பளபளப்பிற்கு உதவுகிறது. தினசரி நெல்லிக்காய் சாறு குடித்து வருவதால் பாக்டீரியல் மற்றும் வைரஸ் தொற்றுக்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது.
நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தைப் பலப்படுத்துகிறது. நெல்லிக்காயின் சிறப்பம்சம் யாதெனில் சமைத்தாலும் பதப்படுத்தினாலும் இதனுடைய சத்துக்கள் குறையாது. எலுமிச்சை பழத்தை காட்டிலும் நெல்லிக்காயில் 20 மடங்கு அதிக வைட்டமின் சி உள்ளது.
நம் அன்றாட வாழ்வில் வீடுகளிலும், விசேஷ வீடுகளிலும் வெரைட்டி ரைஸ் என்றாலே தயிர் சாதம், தக்காளி, சாதம் எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளி சாதம் இது போன்றுதான் நாம் சமைத்து வந்துள்ளோம். இன்று அதற்கு மாற்றாக நெல்லிக்காயில் சாதம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். இது ஒரு புதுவிதமான சுவையில் நன்றாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
அரிசி - 1/4 கிலோ
நெல்லிக்காய் - 200 கிராம்
நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை - தேவையான அளவு
கடலைப்பருப்பு - 2 டேபிள்
உளுந்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
வத்தல் - 4
பெருங்காயத்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - தேவையான அளவு
செய்முறை:
அரிசியை நன்கு கழுவி அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும். அரிசி நன்கு ஊறியவுடன் குழையாதவாறு வேகவைத்து வடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். நெல்லிக்காயை நன்கு அலசி ஒரு சிறிய துருவலில் சேர்த்து துருவித் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து கடுகு நன்கு பொறிந்து வந்தவுடன் தேவையான அளவு கருவேப்பிலை கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு,வத்தல் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். துருவி வைத்திருந்த நெல்லிக்காயும் சேர்த்து நன்கு பத்து நிமிடங்கள் வதக்கிகொள்ள வேண்டும்.
இதனுடன் மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்க கொள்ள வேண்டும். இதனுடன் வேகவைத்த சாதத்தை சேர்த்து நன்கு கிளரி கொடுக்கவேண்டும். சுவையான கமகமக்கும் உடலுக்கு ஆரோக்கியமான நெல்லிக்காய் சாதம் தயார்.