

கருவேப்பிலையின் சுவை அனைவருக்கும் பெரும்பாலும் பிடிக்காது. அதை எடுத்து தனியாகவே வைத்து விடுவார்கள். பல நல்ல நன்மைகளைக் கொண்டிருந்தாலும் “தன்னை ஏன் சேர்த்தார்கள் என்று தட்டின் ஒரு ஓரத்தில் அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருக்கும் கருவேப்பிலை” அதனை கொண்டு ஒரு சிறந்த கருவேப்பிலை சாதம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
கருவேப்பிலையில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் புரதச்சத்துக்கள் முடியின் வேர்களைப் பலப்படுத்துகிறது. நரைமுடியைத் தடுத்து முடிவளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்கிறது. கருவேப்பிலையில் இரும்பு சத்து மற்றும் போலிக் ஆசிட் நிறைந்துள்ளதால் ரத்த சிவப்பணுக்களை அதிகரித்து ரத்த சோகையைக் குணப்படுத்த உதவுகிறது.
கருவேப்பிலையின் சாறு குடிப்பது வாந்தி மற்றும் குமட்டல் உணர்வை கட்டுப்படுத்த உதவும். மேலும் கருவேப்பிலை கல்லீரலில் ஏற்படும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைக் குறித்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இப்படி பல நன்மைகளைக் கொண்டிருக்கும் கருவேப்பிலை வைத்து சுவையான கருவேப்பிலை சாதம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். இது ஒரு புதுவிதமான சுவையில் நன்றாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
அரிசி - 500 கிராம்
கறிவேப்பிலை - 300 கிராம்
தேங்காய் எண்ணெய் - 5 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
புளி - சிறிதளவு
நாட்டு சர்க்கரை - 1 ஸ்பூன்
வத்தல் - 5
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - தேவையான அளவு
செய்முறை:
அரிசியை நன்கு கழுவி அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின் அதனை நன்கு குழையாதவாறு வேகவைத்து வடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு ,உளுந்தம் பருப்பு சேர்த்து நன்கு சிவந்து வந்தவுடன் வத்தல் சிறிதளவு புளி சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும். இதனுடன் நன்கு அலசி சுத்தம் செய்த கருவேப்பிலையை சேர்த்து தேவையான அளவு உப்பு, பெருங்காய தூள் சேர்த்து கறிவேப்பிலையின் பச்சை வாசனை போகும் அழைப்பிற்கு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின் இதனுடன் ஒரு ஸ்பூன் நாட்டு சக்கரை சேர்த்து மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த கருவேப்பிலை கலவையை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து நன்கு பொரிந்த உடன் தாளித்து கருவேப்பிலை கலவையில் சேர்க்கவேண்டும். இதனை சாதத்துடன் சேர்த்து நன்கு கிளரி கொடுக்கவேண்டும். சுவையான கமகமக்கும் கருவேப்பிலை சாதம் தயார்.