

குளிர் காலத்தில் மாலை வேளை என்றாலே டீ, காஃபி குடிக்கும்போது மொறு மொறு என்று ஏதாச்சும் சாப்பிட இருந்தா நல்லா இருக்குமே என தேட ஆரம்பித்து விடுவோம். அந்த நேரத்தில் சில வித்தியாசமான சந்தான பக்கோடாக்களை செய்து சாப்பிடலாம்.
1 மஷ்ரூம் பக்கோடா
தேவையான பொருட்கள்:
மஷ்ரூம் _8,
கடலைப்பருப்பு _100 கிராம்
துவரம்பருப்பு _50 கிராம்
அரிசி _1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் தலா _4
பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லி தழை_ சிறிதளவு
உப்பு _தேவைக்கு
எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
செய்முறை: மஷ்ரூமை சுத்தம் செய்து வெந்நீரில் 5 நிமிடம் போட்டு எடுத்து பொடியாக நறுக்கி வைக்கவும். கடலைப் பருப்பு, துவரம்பருப்பு, அரிசி, காய்ந்த மிளகாய், ஆகியவற்றை அரை மணி நேரம் ஊற வைத்து கரகரப்பாக அரைக்கவும். அதில் பச்சை மிளகாய், வெங்காயம், மல்லித்தழை, மமஷ்ரூம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து காயும் எண்ணெயில் பக்கோடாவாக பொரித்து எடுக்கவும்.
புதினா பக்கோடா
தேவையான பொருட்கள்:
புதினா இலைகள் _1கப்
கடலை மாவு _1கப்,
அரிசி மாவு _1/4 கப்
பச்சை மிளகாய் _3
ரவை _1 ஸ்பூன்
உப்பு _தேவைக்கு
எண்ணெய் _பொரிக்க தேவையான அளவு.
செய்முறை: புதினாவுடன் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும். அத்துடன் கடலை மாவு, அரிசி மாவு, ரவை, உப்பு சேர்த்து கெட்டியாக கலக்கவும். இந்த மாவை காயும் எண்ணெயில் பக்கோடாவாக பொரித்து எடுக்கவும்.
காராமணி பக்கோடா
தேவையான பொருட்கள்:
காய்ந்த காராமணி பயறு _100 கிராம்
காய்ந்த மிளகாய் _4
தேங்காய் துருவல் _1 ஸ்பூன்
கறிவேப்பிலை _ சிறிதளவு
பெருங்காயத்தூள் _1/4 ஸ்பூன்
அரிசி மாவு _1 ஸ்பூன்
உப்பு _தேவைக்கு
எண்ணெய் _ பொரிக்க தேவையானது.
செய்முறை: காராமணிப் பயிறை 5 மணி நேரம் ஊற வைத்து பின்னர் தண்ணீரை வடித்து விட்டு காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். இதில் கருவேப்பிலையை கிள்ளிப் போட்டு அரிசி மாவை சேர்த்து கெட்டியாகக் கலந்து காயும் எண்ணெயில் சிறு சிறு பக்கோடாக்களாக பொரித் தெடுக்கவும்.
சேமியா பக்கோடா:
தேவையான பொருட்கள்:
சேமியா _100 கிராம்
கடலை மாவு _50 கிராம்
அரிசி மாவு _1 ஸ்பூன்
நறுக்கிய சின்ன வெங்காயம் _ 5 நறுக்கிய பச்சை மிளகாய் _1 மல்லித்தழை சிறிதளவு
பெருங்காயத்தூள் _1/4 ஸ்பூன்
இஞ்சி_பூண்டு பேஸ்ட் _1 ஸ்பூன்
உப்பு _தேவைக்கு
எண்ணெய் _ பொரிக்க தேவையான அளவு.
செய்முறை: சேமியாவுடன் கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை, இஞ்சி_பூண்டு பேஸ்ட், உப்பு, பெருங்காயத்தூள், சேர்த்து தண்ணீரை சிறிது சிறிதாக விட்டு கெட்டியாக கலக்கவும். இந்த மாவை காயும் எண்ணெயில் கிள்ளிப் போட்டு சிறு சிறு பக்கோடாக்களாக பொரித்து எடுக்கவும்.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here