மாதுளம்பழம் மட்டுமல்ல. அதன் விதைகள், தோல் என எல்லாமே உடம்பிற்கு நல்லது. மாதுளம் விதைகளை வைத்து ரொட்டி செய்து சாப்பிட்டால் வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும்.
அதன் செய்முறையைப் பார்க்கலாமா?
மாதுளை விதை மிக்ஸ்ட் ரொட்டி!
தேவை:-
* கோதுமை மாவு (சலித்தது) - 250 gms.
* வெங்காயம் - 5
* நல்ல மாதுளம் விதைகள் (பொடித்தது) - 1 கப்
* பச்சை மிளகாய் - 5
* இஞ்சி - 1 துண்டு
* மாங்காய் பவுடர்(ஆம்சூர்) - 2 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 கப்
* நல்ல தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - தேவையானது
* தண்ணீர் - கொஞ்சம்
செய்முறை:-
முதலில், வாயகன்ற பாத்திரமொன்றில், சலித்த கோதுமை மாவைப் போட்டு, தேவையான உப்பு, தயிர் மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல நன்கு பிசைந்து, அதன் மீது லேசாக நெய் தடவும். இதை சுமார் பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும். தயிர் சேர்ப்பது மிருதுவான தன்மையை அளிக்கும்.
*வெங்காயத்தைத் தோல் நீக்கிப் பொடிப்பொடியாக அரிந்து கொள்ளவும்.
*பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
*பொடியாக அரிந்த வெங்காயத்தில் லேசாக உப்பைத் தூவி கலந்து வைக்கவும். பத்து நிமிடங்கள் சென்றபின், அதிலிருந்து தண்ணீரைப் பிழிந்து எடுத்து விடவும்.
*பிழிந்தெடுத்த வெங்காயத்துடன், அரிந்து வைத்திருக்கும் பச்சை மிளகாய், இஞ்சி, மாதுளம் விதைப்பொடி,அம்சூர் பவுடர் ஆகியவற்றைக் கலந்து வைத்துக் கொள்ளவும்.
*பிசைந்து வைத்திருக்கும் கோதுமை மாவை மறுபடியும் நன்கு பிசைந்து, பின்னர் அதை எலுமிச்சையளவு உருண்டைகளாகத் தயார் செய்யவும். ஒவ்வொரு உருண்டைக்கும் நடுவே, மாதுளை வெங்காயக் கலவையிலிருந்து கொஞ்சம் வைத்து மெதுவாக மூடி சப்பாத்திபோல் இட்டுக்கொள்ளவும்.
*அடுப்பில் சப்பாத்தி கல்லைப் போட்டு காய்ந்ததும், இட்டு வைத்த சப்பாத்தியை ஒவ்வொன்றாக போட்டு, சிறிது நெய்யை பரவலாக விட்டு, இருபுறமும் பொன்னிறமாக ஆகும்வரை திருப்பிப் போட்டு எடுக்கவும்.
சுடச்சுட சாப்பிடுகையில் செம டேஸ்ட்டாக இருக்கும். தொட்டுக்கொள்ள, சைட் டிஷ் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்.