
மழை நேரத்தில் சூடான சோற்றுக்கு போட்டுப் பிசைந்து சாப்பிட துவையல் வகைகள் இருந்தால் அதன் ருசியே தனிதான். இதோ உங்களுக்காக சில துவையல் வகைகள் இங்கு:
முள்ளங்கி துவையல்
தேவை:
முள்ளங்கி- அரை கிலோ
மிளகாய் வற்றல் - பத்து
பெருங்காயம்- இரண்டு சிட்டிகை
புளி- எலுமிச்சை அளவு
உளுத்தம்பருப்பு- ஒன்றரை டேபிள்ஸ்பூன்
உப்பு எண்ணெய் -தேவைக்கு
செய்முறை:
முள்ளங்கியை நன்றாக கழுவி தோலுடனே வெட்டி வேக வைக்கவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு போட்டு சிவக்க வறுத்து அத்துடன் மிளகாய் வற்றல் பெருங்காயத்தையும் வறுத்து வேகவைத்து ஆறவைத்த முள்ளங்கியுடன் சேர்த்து புளி, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பின் ஒரு தாளிப்பு கரண்டியில் சிறிது எண்ணெயில் கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து பரிமாறவும்.
புடலங்காய் துவையல்
தேவை:
புடலங்காய் - ஒன்று (மீடியம் சைஸ்)
துவரம் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு - ஒரு ஸ்பூன்
மிளகாய் வற்றல் - ஐந்து
மிளகு - ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
உப்பு -தேவையான அளவு
எண்ணெய்- சிறிது
செய்முறை:
புடலங்காயை சுத்தம் செய்து நடுவில் இருக்கும் விதைகளை எடுத்து விட்டு சிறிது எண்ணெயில் வதக்கவும். மேலும் சிறிது எண்ணெயில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு போன்றவற்றை வறுத்து அதனுடனே மிளகாய் வற்றல் பெருங்காயம் சேர்த்து வறுக்கவும். இத்துடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் துவையலாக அரைத்து கடுகு தாளித்துக் கொட்டி பரிமாறவும்.
சிறியநெல்லிக்காய் துவையல்
தேவை:
சிறிய நெல்லிக்காய் - அரைக்கப் பெருங்காயம் - இரண்டு சிட்டிகை
கடுகு - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் வற்றல் - 15
உளுத்தம் பருப்பு - ரெண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய்- தேவைக்கு
செய்முறை:
சிறிய நெல்லிக்காயில் இருக்கும் கொட்டைகளை நீக்கி கழுவவும். ஒரு வாணலில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் உளுத்தம் பருப்பு போட்டு சிவந்ததும் வற்றல் சேர்த்து சிவக்க வறுக்கவும் நெல்லிக்காயையும் தனியே வதக்கி முதலில் நெல்லிக்காயை அரைத்து பின் அத்துடன் வறுத்த உளுத்தம் பருப்பு வற்றல் பெருங்காயம் உப்பு சேர்த்து அரைக்கவும். இப்போது வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்ததும் கருவேப்பிலை போட்டு இந்த விழுதையும் சேர்த்து போட்டு கிளறி கெட்டியானதும் இறக்கவும். எண்ணெய் சற்று கூடுதலாக இருப்பது நல்லது. இதே போல் பெரிய நெல்லிக்காயிலும் துவையலாக அரைக்கலாம்.
பிரண்டைத் துவையல்
தேவை:
பிரண்டை- இரண்டு கட்டு
மிளகாய் வற்றல் - 5
தேங்காய் -ஒரு பல்
நல்லெண்ணெய் -சிறிது
உப்பு -தேவைக்கு
உளுத்தம் பருப்பு -ஒரு டீஸ்பூன்
புளி- நெல்லிக்காய் அளவு
செய்முறை:
பிரண்டையை தோல் நீக்கி கழுவி சட்டியில் எண்ணெய்விட்டு நீர் சுண்ட நன்கு வதக்கவும். அதனுடன் தேங்காய், புளி, உப்பு சேர்த்து அரைத்து சிறிது நல்லெண்ணெயில் கடுகு உளுத்தம் பருப்பு தாளித்து அதில் கொட்டிக்கிளறி பரிமாறவும்.