

இந்த ரவா பொங்கலை பொதுவாக எல்லோரும் வெள்ளை ரவையில் செய்வார்கள். ஆனால் இதனை கோதுமை ரவையில் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
சம்பா கோதுமை ரவா பொங்கல்
தேவையான பொருட்கள்:
சம்பா கோதுமை ரவை – 2 கப்
பாசிப்பருப்பு – 1 கப்
சீரகம், மிளகு – தலா 1 ஸ்பூன்
நெய் – ¼ கப்
எண்ணெய் – ½ கப்
பொடித்த முந்திரிப் பருப்பு – ¼ கப்
நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
செய்முறை:
சீரகம், மிளகை வெறும் வாணலியில் போட்டு வறுத்து மிக்ஸியில் ஒன்று இரண்டாக பொடித்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய் ஊற்றி முந்திரி பருப்பை உடைத்துப் போட்டு சிவக்கப் பொரித்து எடுக்கவும்.
அதே வாணலியில் கோதுமை ரவையை சிறிது நெய் ஊற்றி வறுத்து எடுக்கவும். பாசிப்பருப்பை ஒரு ஸ்பூன் நெய் விட்டு குழைய வேக வைத்து எடுத்து, அதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதிக்கும் நீரில் பொடித்த மிளகு–சீரகம், ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு மெதுவாக ரவையை சேர்த்துக் கிளறவும். தேவைப்பட்டால் கொதிக்கும் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
பொங்கல் ரவை நன்கு வெந்ததும், பொரித்த முந்திரியை சேர்த்து எண்ணெய் சேர்த்து நன்கு கிளறி, தளர்வாக இருக்கும்படி இறக்கவும்
கொத்தமல்லித்தழை தூவி ஹாட் பாக்ஸில் வைத்துக் கொண்டால், பரிமாறும்போது நன்கு குழைவாக இருக்கும். சாம்பார் மற்றும் சட்னியுடன் பரிமாறவும்.
சம்பா கோதுமை ரவா களி
தேவையான பொருட்கள்:
சம்பா கோதுமை ரவை – 2 கப்
ராகி மாவு – 1 கப்
நல்லெண்ணெய் – ¼ கப்
உப்பு – தேவையான அளவு
நெய் – 1 ஸ்பூன்
செய்முறை:
அடுப்பில் மிதமான தீயில் வாணலியை வைத்து நெய் ஊற்றி ராகி மாவை வறுத்து எடுக்கவும். வறுத்த ராகி மாவில் உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து வைக்கவும்.
குக்கரில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ரவையை போட்டு நன்கு வறுத்துக்கொண்டு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு கரைத்த ராகி மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, குக்கரை மூடிவைத்து மூன்று விசில் வந்ததும் இறக்கவும். குக்கரைத் திறந்து ரவாக்களியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கிளறி, சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
வேர்க்கடலை சட்னி மற்றும் தயிருடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.