என்ன பெரிய அதிசயம் எண்ணைல வாழைக்காயை சீவி போட்டா சிப்ஸ் ரெடி அப்படின்னு நினைக்க வேண்டாம். பொரிக்கும் போது மொறுமொறுப்பாகவும் கொஞ்ச நேரத்திலேயே நமுத்தும் போய்விடும். ஒரு மாசம் வரை சிப்ஸ் மொரு மொருன்னு இருக்கிறதுக்கு சில டிப்ஸை ஃபாலோ பண்ணினா வீட்டிலேயே அடிக்கடி வாழைக்காய் சிப்ஸ் செஞ்சு அசத்தலாம்.
வாழைக்காய் 2
உப்பு சிறிது
காரப்பொடி அரை ஸ்பூன்
எண்ணெய் பொரிக்க
முத்தின வாழைக்காயாக இரண்டு எடுத்து மேல் தோலை மட்டும் சிவி எடுக்கவும். ஒரு ஸ்பூன் உப்பை சிறிது தண்ணீர் விட்டு தனியாக கரைத்து வைக்கவும். நல்ல சூடான எண்ணெயில் நேரடியாகவே சிப்ஸ் கட்டையில் வச்சு வாழைக்காயை சீவி விடலாம். மொத்தமாக சீவி வைத்துக் கொள்ளாதீர்கள். வாழைக்காய் கறுத்துவிடும். பாதி வெந்ததும் எடுத்து அடுத்த ஈடு வாழைக்காய் சீவி போடவும். திரும்பவும் பாதி வெந்த வாழக்காயை எண்ணெயில் போட்டு உப்பு தண்ணீர் தெளித்து வறுக்க இம்முறை மிகவும் மொறு மொறுப்பாக வாழக்காய் சிப்ஸ் தயாராகிவிடும். பொரித்த பிறகு கடைசியாக உப்பு சேர்த்தால் வாழைக்காயில் உப்பு பிடிக்காது.
மிதமான தீயில் வைத்து சலசலப்பு அடங்கியவுடன் எடுக்க மிகவும் கிறிஸ்பியாக இருக்கும் இந்த வாழக்காய் சிப்ஸ். ஒரு மாதமானாலும் முறுமுறுப்பு போகாது.
எல்லா வாழக்காயையும் பொரித்து கடைசியாக சிறிது காரப்பொடி தூவி குலுக்கி விட சிப்ஸ் ரெடி. காற்று புகாத டப்பாவில் போட்டு பத்திரப்படுத்தவும்.
பருப்பு மசாலா பூரி:
கடலைப்பருப்பு 1/2 கப்
துவரம்பருப்பு 1/4 கப்
பூண்டு 4பற்கள்
இஞ்சி ஒரு துண்டு
சோம்பு 1/2 ஸ்பூன்
கிராம்பு 2
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி தழை சிறிது
உப்பு தேவையான அளவு
மிளகாய் 3
கோதுமை மாவு 2 கப்
ரவை 2 ஸ்பூன்
எண்ணெய் பொரிக்க
கடலைப்பருப்பு, துவரம் பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற விடவும். அத்துடன் பூண்டு, தோல் நீக்கிய இஞ்சி, சோம்பு, கிராம்பு, மஞ்சள் தூள் ,காய்ந்த மிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதுடன் இரண்டு ஸ்பூன் ரவை சேர்த்து பத்து நிமிடம் ஊற விடவும்.ரவை நன்கு ஊறிவிடும்.
இத்துடன் கோதுமை மாவு இரண்டு கப் சேர்த்து தேவையான உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். சின்ன சின்ன உருண்டைகளாக செய்து பூரியாக இட்டு எண்ணெயில் பொரித்தெடுக்க ருசியான, மணத்துடன் கூடிய பருப்பு பூரி தயார். இதற்கு தொட்டுக்கொள்ள தயிர் அல்லது ஊறுகாயே போதும். அவ்வளவு ருசியாக இருக்கும்.