உளுந்தங்கஞ்சியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், செறிமானத்திற்கு மிகவும் உதவுகிறது. உளுந்து சரும ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. இது மூட்டுவலி பிரச்னைகளை சரிசெய்யக்கூடியதாகும். பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் சுரக்க உளுந்து பெரிதும் உதவுகிறது. இன்னும் என்னற்ற பலன்களை கொண்ட இந்த உளுந்தங்கஞ்சியை வீட்டிலேயே எப்படி செய்யலாம்னு பாக்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
உளுந்து- 1கப்
வெல்லம்-1 கப்.
முந்திரி -10
நெய்- 4 தேக்கரண்டி.
ஏலக்காய்-1 சிட்டிகை.
தேங்காய் துருவல்- தேவையான அளவு.
செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு கப் உளுந்தை லேசாக வறுத்துவிட்டு 4 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும். பிறகு ஊற வைத்த உளுந்தை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
அடுத்து ஒரு ஃபேனில் ஒரு கப் வெல்லத்தை போட்டு அத்துடன் தண்ணீர் சேர்த்து வெல்லத்தை காய்ச்சி, வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் 4 தேக்கரண்டி நெய் விட்டு, அதில் முந்திரி 10 சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுக்கவும். பிறகு அத்துடன் 2 கப் தண்ணீர் சேர்க்கவும். இப்போது தண்ணீர் நன்றாக கொதித்து வந்ததும். அரைத்து வைத்திருக்கும் உளுந்தை கொஞ்சம் கொஞ்சமாக கட்டிப்படாமல் சேர்த்துவிட்டு கிண்டவும். அடுப்பை சிம்மில் வைத்து உளுந்தை நன்றாக வேக விடவும். பிறகு நாம் தயார் செய்து வைத்திருக்கும் வெல்லத்தை சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது உளுந்தையும், வெல்லத்தையும் நன்றாக கொதிக்க விட்டு அத்துடன் 1 சிட்டிகை ஏலக்காய் தூள், துருவிய தேங்காய் சிறிதளவு சேர்த்து இறக்கவும். இப்போது சுவையான, மற்றும் ஆரோக்கியமான உளுந்தங்கஞ்சி தயார்.