கேரளாவில் இந்த நெய்யப்பம் ரெசிபி மிகவும் பிரபலமாகும். கேரள மக்கள் விரும்பி உண்ணும் உணவாக இது இருக்கிறது. சூடான நெய்யில் நேரடியாக மாவை ஊற்றி செய்யப்படும் இந்த நெய்யப்பம் அவ்வளவு ருசியாக இருக்கும். சரி வாருங்கள், கேரளா ஸ்டைல் நெய்யப்பத்தை வீட்டிலேயே எப்படி சுவையாக செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
நெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு
பச்சரிசி - 1 கப்
வெல்லம் - 1 கப்
தேங்காய் துண்டுகள் - சிறிதளவு
ஏலக்காய் பொடி - 1 ஸ்பூன்
எள் - 1 ஸ்பூன்
செய்முறை:
முதலில் பச்சரிசியை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு அலசி கொள்ளுங்கள். பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சுமார் மூன்று முதல் நான்கு மணி நேரம் ஊற விடவும்.
அடுத்ததாக வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மிக்ஸி ஜாரில், ஊறவைத்த பச்சரிசி மற்றும் கரைத்த வெள்ளத்தை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இந்தக் கலவையை வேறு பாத்திரத்துக்கு மாற்றி ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்குங்கள்.
பின்னர் தேங்காய் துண்டுகளை நெய்யில் வறுத்து சேர்க்கவும். இறுதியில் எள் சேர்த்து நன்கு கலந்த பின்னர், சுமார் 8 மணி நேரத்திற்கு அப்படியே மாவை புளிக்க விடுங்கள்.
மாவு நன்றாகப் புளித்ததும் அடுப்பில் வாணலி வைத்து, பொரிப்பதற்குத் தேவையான அளவு நெய் ஊற்றி சூடானதும், ஒரு கரண்டி மாவை எடுத்து அப்படியே நெய்யில் ஊற்றி அப்பம் போல பொரித்து எடுத்தால் அட்டகாசமான சுவையில் நெய்யப்பம் தயார். இதை செய்யும்போது தீயை குறைவான அளவில் வைப்பது முக்கியம். இல்லையேல் அப்பம் கருகிவிடும்.
இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை வீட்டில் முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.