

தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க வேண்டுமா னால் எவ்வளவு தேங்காய் வைக்கிறோமோ, அதே அளவுக்கு கொத்தமல்லி இலையையும் சேர்த்து அரைக்கவேண்டும்.
தேன்குழல், தட்டை, சீடை, கை முறுக்கு போன்ற பட்சணங்களுக்கு மாவு பிசையும்போது தண்ணீர் விட்டுப் பிசைவதற்கு பதிலாக தேங்காய்ப்பால் விட்டுப் பிசைந்தால் அதன் சுவையே அலாதிதான்.
பசலக்கீரையை ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் விட்டு நன்றாக அலசி, அலம்பிவிட்டு பின் நறுக்கவேண்டும். நறுக்கிய பிறகு அலம்பினால் கொழகொழவென்று ஆகிவிடும்.
கொத்தமல்லி, பச்சைமிளகாய், உப்பு, புளி ஆகியவற்றை மையாக அரைத்து பிரட் துண்டுகளில் நெய் விட்டு டோஸ்ட் செய்தால் சுவையோ சுவை. கூட்டுக்கு உளுந்து தாளிப்பதைவிட வேர்க்கடலையை வறுத்து ஒன்றிரண்டாக பொடித்துப்போட்டால் சுவையாக இருக்கும்.
காரப்பொங்கல் செய்யும்போது ஃப்ரெஷ்ஷான எண்ணையில் தாளித்தால் பொங்கலின் சுவையும் மணமும் அதிகரிக்கும்.
தக்காளி சட்னி செய்யும்போது எள்ளை வறுத்துப்போட்டு அரைத்து பாருங்கள். மணம் தூக்கலாக இருக்கும்.
மாங்காயைத்துருவி பொரித்த குழம்பு மற்றும் கூட்டு வகைகளில் கடைசியாகப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கினால் சுவையாக இருக்கும்.
கிரேவி, குருமா, கூட்டு செய்யும்போது சில சமயங்களில் கெட்டியாகி விடும். அதைத்தவிர்க்க தக்காளியை கூடுதலாக அரைத்துச் சேர்த்தால் தளர்ச்சியாக இருப்பதுடன் அதிக எண்ணையும் சேர்க்க தேவை இருக்காது.
இட்லி மாவு புளித்துவிட்டால் ஒன்றிரண்டு பிடி வடித்த சாதத்துடன் பால் சேர்த்து மிக்ஸியில் மசியுங்கள். இதை இட்லி மாவுடன் கலந்து மிதமான தீயில் தோசை வார்த்துப்பாருங்கள். பேப்பர் ரோஸ்ட் போல இருக்கும்.
நூடுல்ஸ் செய்யும்போது மசாலா பவுடருக்குப் பதிலாக சமையலுக்கு பயன்படுத்தும் மிளகு, சீரகம் சேர்த்து அரைத்தெடுத்த ரசப்பொடியைத் தூவினால் நூடுல்ஸ் சுவை வித்தியாசமாக இருக்கும்.
அப்பளம், வடகம் பொரிப்பதற்கு முன் எண்ணெயில் சிறிது மஞ்சள் தூளைத்தூவி பிறகு பொரித்துப் பாருங்கள். நிறம், மணம் சுவையுடன் சூப்பராக இருக்கும்.