கீரைகள் எப்போதும் உடலுக்கு வலு கொடுப்பவை. உணவில் கீரையை அடிக்கடி சேர்த்து வந்தாலே ஆரோக்கியத்தில் குறைவிருக்காது. ஒவ்வொரு கீரையும் ஒவ்வொரு மருத்துவ குணம் கொண்டது. 50க்கும் மேற்பட்ட கீரை வகைகள் இருந்தாலும் இப்பொழுது 15 வகை கீரைகள்தான் புழக்கத்தில் உள்ளது. பொதுவாக கீரை என்றாலே சத்துக்கள் நிறைந்தவை. அதுவும் இந்த சக்கரவர்த்தி கீரை நிறைய சத்துக்களை உள்ளடக்கியவை. கீரைகளுக்கெல்லாம் அரசன் என்ற பொருளில் இது சக்கரவர்த்தி கீரை என அழைக்கப்படுகிறது. இதனை கண்ணாடிக் கீரை, பத்துவாக்கீரை,Wild Spinach எனவும் அழைக்கிறார்கள். இதன் விதை அரைக்கீரை விதையைப் போலவே கருப்பாகவும், சிறியதாகவும் இருக்கும். இதன் இலையின் நடுப்பகுதி ஊதா நிறத்தில் இருக்கும்.
இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்து, துத்தநாகம் போன்ற சத்துக்கள் நிறைந்தது. இதன் குண நலம் தெரிந்தால் உணவில் அடிக்கடி சேர்க்காமல் இருக்க மாட்டோம்.
1) குடலை சுத்தம் செய்யும்
2) செரிமான பிரச்சனை தீர்க்கும்
3) மலச்சிக்கலை போக்கும்
4) சிறுநீரகத் தொற்றை நீக்கும். சிறுநீர் எரிச்சல், வலி, சிறிது சிறிதாக போவது போன்ற பிரச்சனைகளுக்கும் இக் கீரை நல்லது.
5) புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கும்
6) வயிற்றுப் புண்ணை குணமாக்கும்
7) ரத்த சோகையை குணப்படுத்தும்.
8) முட்டி வலிக்கு வெளி பூச்சாக இந்த கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து இரண்டு ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி இளம் சூட்டில் முட்டியில் வைத்து கட்ட வலி வீக்கம் குறையும்.
9) ஒரு கைப்பிடி இலையுடன் அரை ஸ்பூன் சுக்கு, ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்த்து ஒரு கப் நீர் விட்டு நன்கு கொதிக்க விட்டு வடிகட்டி பருக ரத்த சோகை குணமாகும்.
10) கீரையை கல் உப்பு சேர்த்து அரைத்து வலி இருக்கும் இடங்களில் இளம் சூட்டோடு பற்று போட வலி குறையும். மூட்டுகளில் இருக்கும் வாயு நீரை உறிஞ்சி விடும் தன்மை இக்கீரைக்கு உண்டு.
11) இந்தக் கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து வேகவிட்டு மசித்து, தேங்காய், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கலந்து கடுகு தாளித்து கீரை மசியலாக செய்து உண்ணலாம்.
12) அதிகம் புழக்கத்தில் இல்லாத, ருசியாக இருக்கும் இந்த சக்கரவர்த்தி கீரையை உணவில் சேர்த்துதான் பாருங்களேன்.