கும்பகோணம் கடப்பா என்னும் குழம்பு வகை தஞ்சாவூர், கும்பகோணம் பகுதியில் மிகவும் பிரபலமானதாகும். இதை பூரி, இட்லி, தோசை, ஊத்தாப்பத்துடன் சேர்த்து பரிமாறுவார்கள். சரி வாங்க, இன்னைக்கு நம்மளும் செம டேஸ்டியான கும்பகோணம் கடப்பாவை எப்படி வீட்டிலேயே செய்யறதுன்னு பாக்கலாம்.
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு- ¼ கிலோ.
மஞ்சள் பொடி- சிறிதளவு.
உருளை கிழங்கு-1
துருவிய தேங்காய்-1கப்.
சோம்பு- 1 தேக்கரண்டி.
பொட்டுக்கடலை-1 தேக்கரண்டி.
கசகசா-1/2 தேக்கரண்டி.
பச்சை மிளகாய்-2
இஞ்சி- 1 துண்டு.
பூண்டு-5
சோம்பு, பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை- சிறிதளவு.
நறுக்கிய வெங்காயம்- 1 கப்
கருவேப்பிலை- சிறிதளவு.
தக்காளி-1/2 கப்.
உப்பு- தேவையான அளவு.
எழுமிச்சைப்பழ சாறு-1 தேக்கரண்டி.
கொத்தமல்லி- சிறிதளவு.
எண்ணெய்- தேவையான அளவு.
செய்முறை விளக்கம்:
முதலில் அடுப்பில் குக்கரை வைத்து அதில் பாசிப்பருப்பை ¼ கப் போட்டு நன்றாக வறுத்துவிட்டு அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள் பொடி சிறிது, இரண்டாக வெட்டிய உருளை கிழங்கு 1 சேர்த்து 4 விசில் விட்டு நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். நன்றாக வெந்த உருளைகிழங்கு, பாசிப்பருப்பை மசித்து வைத்துக்கொள்ளவும்.
இப்போது மிக்ஸியில் 1 கப் துருவிய தேங்காய், சோம்பு 1 தேக்கரண்டி, பொட்டுக்கடலை 1 தேக்கரண்டி, கசகசா ½ தேக்கரண்டி, பச்சை மிளகாய் 2, இஞ்சி 1 துண்டு, பூண்டு 5 சேர்த்து நன்றாக பேஸ்டாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் 2 தேக்கரண்டி விட்டு சோம்பு, பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை சிறிதளவு சேர்த்து வதக்கவும். இப்போது பொடியாக வெட்டிய பெரிய வெங்காயம் 1 சேர்த்து நன்றாக வதக்கவும். அத்துடன் கருவேப்பிலை சிறிதளவு, 1/2 கப் தக்காளி சேர்த்து அத்துடன் வேகவைத்த பருப்பை சேர்த்து 1கப் தண்ணீர் விட்டு, வேகவைத்த உருளை கிழங்கையும் சேர்த்து கொஞ்சம் கொதி வந்ததும், அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை சேர்த்து 1 கப் தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
கடைசியாக எழுமிச்சை பழசாறு 1 தேக்கரண்டி, கொத்தமல்லி சிறிதளவு தூவி இறக்கவும். அவ்வளவுதான் டேஸ்டியான கும்பகோணம் கடப்பா தயார். நீங்களும் வீட்டுல செஞ்சி சாப்பிட்டு பாருங்க. டேஸ்ட் சும்மா அல்டிமேட்டா இருக்கும்.