பிரியாணி போன்ற மதிய உணவு வகைகளில் புதிது புதிதாக எதையாவது சமைத்து தந்தால் மட்டுமே பிள்ளைகள் உணவை விரும்பி சாப்பிடுவார்கள். இங்கு சத்து மிகுந்த சுவையான கலர் கலரான குடைமிளகாய் பிரியாணியும் பூசணி பச்சடியும் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
குடை மிளகாயில் வைட்டமின் ஏ,பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் உள்ளன. வாதம் தொடர்புடைய நோய்கள், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவற்றுக்கு நிவாரணம் ஆகிறது.
குடைமிளகாய் பிரியாணி
தேவை:
மஞ்சள், சிவப்பு ,பச்சை என்ற மூன்று நிறங்களில் நறுக்கிய குடைமிளகாய் துண்டுகள்- ஒரு கப்
பிரியாணி அரிசி அல்லது பச்சரிசி - 2 கப் இஞ்சி பூண்டு விழுது- அரை ஸ்பூன்
தக்காளி-2
பெரிய வெங்காயம்- 1
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் -1 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
லவங்கம்- 3
உப்பு -தேவையான அளவு
நெய் -2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் -ஒரு ஸ்பூன்
பிரியாணி இலை - 1
ஏலக்காய் -2
அன்னாசி பூ - 2
மராட்டி மொக்கு- 2
கொத்தமல்லி பொதினாத் தழை - சிறிது
செய்முறை;
பிரியாணி அரிசி அல்லது பச்சரிசியை 5 நிமிடம் ஊற வைத்து கொதிக்கும் நேரிலிட்டு முக்கால் பதமாக வேகவைத்து வடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு அடி கனமான வாணலியில் நெய்யை ஊற்றி சூடாக்கி கொடுத்திருக்கும் பிரியாணி இலை ஏலக்காய் அன்னாசிப்பூ போன்ற மசாலா பொருட்களை சேர்த்து வாசம் வந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளி மற்றும் வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி தேவையான உப்பு, மஞ்சள்தூள் மற்றும் மிளகாய்தூள் சேர்த்து நன்றாக வதக்கி அரிந்து வைத்திருக்கும் குடைமிளகாய் துண்டுகளை சேர்த்து வதங்கியதும் வடித்த அரிசியை சேர்த்துக் கிளறி குறைந்த தீயில் வைத்து ஐந்து நிமிடம் கழித்து இறக்கி மேலே சிறிதளவு நெய்விட்டு கொத்தமல்லி தழை பொதினா தழை தூவி இறக்கவும். குடமிளகாய் மணத்துடன் வித்தியாசமான ஒரு பிரியாணி வகையாக இருக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள சாஸ் அல்லது வெங்காய ரைத்தா போன்றவைகள் சூப்பராக இருக்கும். மசால்களும் காரத்துக்கு மிளகுத்தூள் சேர்ப்பதும் அவரவர் சாய்ஸ். குடைமிளகாய அதிகம் வேகக் கூடாது.
பூசணிக்காயில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. பீட்டா கரோட்டின் நிறைந்த இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்குத் தேவையான ஆற்றல் தந்து உடல் எடையை சீராக வைக்க உதவும். சருமத்திற்கு நல்ல பாதுகாப்படன் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
பூசணிக்காய் பச்சடி
தேவை:
சிவப்பு நிற பூசணி - 2 துண்டுகள்
நெய் அல்லது எண்ணெய்- தாளிக்க
கடுகு உளுந்து சீரகம் - தாளிக்க
பச்சை மிளகாய்- 2 நீளமாக நறுக்கியது
கெட்டித்தயிர் - 1 கப்
உப்பு- தேவைக்கு
கொத்தமல்லித்தழை - சிறிது
செய்முறை:
பூசணித் துண்டுகளை தோலெடுத்து நறுக்கி வேகவைத்து மசித்து கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு தாளிக்க தந்துள்ள பொருட்களை போட்டு தாளித்து புளிப்பில்லாத கெட்டித் தயிரில் உப்பு, பூசணி விழுதுடன் சேர்த்து நன்றாக கலந்து மேலே கொத்தமல்லித் தழை தூவி பரிமாறலாம். பூசணியின் இனிப்புச் சுவை தூக்கிக் கொடுக்க சிட்டிகை சர்க்கரை சேர்ப்பது உங்கள் விருப்பம்.