செய்வோம்; சாப்பிடுவோம்... சத்துகளையும் தெரிந்து கொள்வோம்!

தினை பாயசம்
தினை பாயசம்Image credit - youtube.com
நந்தினி சுப்ரமணியம்

நந்தினி சுப்ரமணியம் பிரபல நாட்டு மருத்துவர் சன் டிவி புகழ் சித்த மருத்துவர் சுப்ரமணியம் அவர்களின் மகள். நந்தினி அவர்கள் சித்த மருத்துவத்தில் ஆழ்ந்த அனுபவம் மிக்கவர். கல்கி குழும பத்திரிக்கையான மங்கையர் மலர் இதழில் தொடர்ந்து எழுதியவர். இவர்கள் இயக்கும் [Sri Sesha Sai Herbal Clinic & Treatment Centre] பாரம்பரிய மூலிகை மற்றும் சித்தா மருத்துவ மையத்தில் சித்தா மற்றும் ஆயுர்வேத முறைகளைக் கொண்டு பல்வேறு நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

Updated on

ன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவை அளிப்பது பெற்றோருக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. பள்ளியில் இருந்து வரும் குழந்தைகள் மாலையில் உண்ண திண்பண்டங்களைக் கேட்கின்றனர். கடைகளில் விற்கும் திண்பண்டங்கள் எல்லாம் ரசாயனம் கலந்து இருக்கிறது. இப்படிப்பட்ட நச்சுத் தன்மையுள்ள திண்பண்டங்களைக் குழந்தைகளுக்குக் கொடுக்காமல் வீட்டிலேயே எளிதாகவும், சத்து நிறைந்ததாகவும் திண்பண்டங்களைச் செய்துகொடுக்கலாம். சில எளிய திண்பண்டங்களின் செய்முறை பின்வருமாறு:

நந்தினி சுப்ரமணியம்
நந்தினி சுப்ரமணியம்

தினை பாயசம்

தேவையான பொருட்கள்: தினை - 1 கப், தேங்காய் – 1, வெல்லம் - 1 கப், ஏலக்காய் - ½ டீஸ்பூன்.

செய்முறை: தினையை நாலு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து குக்கரில் போட்டு 2 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். வெல்லத்தினை தண்ணீர் விட்டு கலக்கி அதனை வடிகட்டி மாசுகளை நீக்கி பின்பு பாகு பதம் வரும் வரை கிண்டி அதில் ஏலக்காய் போட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். தேங்காயை அரைத்து முதல் மற்றும் இரண்டாம் பால் எடுத்து வைத்துகொள்ள வேண்டும். வேகவைத்த தினையில் வெல்லப்பாகு மற்றும் முதல் தேங்காய் பால் சேர்த்து கிண்டி, இறக்கும் தருவாயில் இரண்டாம் தேங்காய் பாலையும் சேர்த்து இறக்கிக் கொள்ள வேண்டும். நெய்யில் முந்திரி திராட்சையை போட்டு வறுத்து அதனை இந்த பாயசத்துடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பயன்கள்:

தினையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் ஆரோக்கியமான செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.

ரத்த சர்க்கரை அளவை அதிகப்படுத்தும் வாய்ப்பு தினையில் குறைவு. இது நீரிழிவு நோயாளிகளுக்கும், உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கும் ஒரு நல்ல தேர்வாக அமைகிறது.

மலச்சிக்கலைத் தடுக்கவும் தினை உதவுகிறது.

தினையில் கால்சியம், புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம் போன்றவை உண்டு.

இரும்புச்சத்து நிறைந்த தினை ரத்தசோகை உண்டாக்காமல் தடுக்கிறது.

கேழ்வரகு சிம்ளி:

தேவையான பொருட்கள்: கேழ்வரகு - 300 கிராம், வேர்க்கடலை - 200 கிராம், வெல்லம் – சுவைக்கேற்ப, உப்பு - 2 சிட்டிகை.

செய்முறை: மாவில் சிறிது உப்பு சேர்த்து நீர்விட்டு பிசைந்து உருண்டைகளாக செய்து ரொட்டிபோல் தட்டி தவாவில் சுட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு அதனை ஆறவைத்து சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். மிக்ஸியில் இந்த துண்டுகளை போட்டு நீர் விடாமல் அரைத்து அத்துடன் வேர்க்கடலை மற்றும் உதிர்த்த வெல்லத்தை போட்டு அரைத்து எடுத்து அதனை லட்டு வடிவில் பிடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த சிம்ளி 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

கேழ்வரகு புட்டு:

தேவையான பொருட்கள்: கேழ்வரகு - ¼ கிலோ கிராம், தேங்காய் - அரை கப், நாட்டு சர்க்கரை - தேவையான அளவு, ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு, நெய் - 4-5 தேக்கரண்டி.

கேழ்வரகு புட்டு
கேழ்வரகு புட்டுImage credit - youtube.com

செய்முறை: சுடுநீரில் சிறிது உப்பு சேர்த்து கலக்கி அதனை கேழ்வரகு மாவில் தெளித்து மிதமான ஈரப்பதம் இருக்குமாறு கெட்டி இல்லாமல் பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மாவினை சல்லடையால் சலித்து, அதனை இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வேகவைத்து, எடுத்துக்கொள்ள வேண்டும். வேகவைத்து எடுத்த இந்த மாவில் தேங்காய், நாட்டு சர்க்கரை, ஏலக்காய், நெய் சேர்த்து கிளறி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பயன்கள்:

சிறுதானியங்களில் இருப்பதை விட 5-30 மடங்கிற்கு ராகியில் கால்சியம் உள்ளது. மேலும், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு போன்ற தாதுப்பொருட்களும் இதில் அதிக அளவில் உள்ளன.

எலும்பு உறுதிக்கும் ஆரோக்கியத்திற்கும் கால்சியம் என்பது மிகவும் முக்கியமான தாதுப்பொருளாகும்.

அதிக புரதமிக்க கூறுகள் இந்த தானியத்திற்கு ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுக்கும் தன்மையை வழங்குகிறது.

ராகி ரத்த சர்க்கரை அளவு (ஹைப்பர் க்ளைசீமிக்) மற்றும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது.

பொருள் விளங்கா உருண்டை

தேவையான பொருட்கள்: வறுத்த வேர்க்கடலை - 1 கப், வறுத்த புழுங்கல் அரிசி - ¼ கப், எள்ளு- 2 டீஸ்பூன், பாசிப்பருப்பு - 2 டீஸ்பூன், பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், வெல்லம் - 1 ஆழாக்கு, ஏலக்காய் – 4.

செய்முறை: பாசிப்பருப்பு மற்றும் அரிசி இரண்டையும் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். வெல்லத்தினை ¼ கப் நீர் விட்டு கரைத்து வடிகட்டிகொள்ள வேண்டும். இந்த வெல்லத்தினை அடுப்பு ஏற்றி பாகு பதத்தில் கிண்டிக்கொள்ள வேண்டும். இத்துடன் வேர்க்கடலை, எள்ளு, பொட்டுக்கடலை, சிறிது அரைத்த அரிசி மற்றும் பாசிப்பருப்பு மாவினை சேர்த்து கிண்டி இறக்கிக்கொள்ள வேண்டும். இத்துடன் பாசிப்பருப்பு, அரிசி மாவினை தொட்டு உருண்டையாக பிடித்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
கொரிய பெண்களின் அழகு ரகசியம் தெரியுமா?
தினை பாயசம்

பயன்கள்:

வேர்க்கடலைகள் புரத மற்றும் நார்சத்து நிறைந்த ஆகாரமாக உள்ளன.

வேர்க்கடலை எச்.டி.எல் அதிகரிக்கும்போது எல்.டி.எல் ஐ குறைக்க உதவுகிறது. இது ஒரு நல்ல வகை கொழுப்பு வகையைச் சேர்ந்தது.

வேர்க்கடலையில் நம் தோலுக்கு மிகவும் உகந்ததான வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி நிறைந்துள்ளது.

பொட்டுக்கடலையில் ஏராளமான நார்ச்சத்துக்கள் மற்றும் புரதச்சத்துக்கள் உள்ளன.

மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

வறுத்த பொட்டுக்கடலையில் மாங்கனீஸ், போலேட், பாஸ்பரஸ் மற்றும் காப்பர் போன்ற இதய நோய்களை குறைக்கும் சத்துக்கள் உள்ளன.

நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதற்கும் உதவுகின்றன.

வறுத்த பொட்டுக்கடலை புரதத்தின் சிறந்த ஆதாரமாகும்.

பொட்டுக்கடலையில் தாமிரம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன. எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்கவும், உதவுகிறது.

logo
Kalki Online
kalkionline.com