எப்போதும் இட்லி, தோசை செய்து அதற்கு சட்னி அரைத்து சலித்துவிட்டதா? அப்படியானால் கட்டாயம் இந்த குண்டூர் கார இட்லியை குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் செய்துக்கொடுங்கள். நல்ல காரசாரமாக குட்டி குட்டியான இட்லியை செய்துக் கொடுத்தால் அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.
சரி வாருங்கள் இந்த பதிவில் குண்டூர் கார இட்லி எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்!
வரமிளகாய் – கைப்பிடி அளவு வரமிளகாய்.
கடலைப்பருப்பு- 2 டீஸ்பூன்
தனியா – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கருவேப்பிலை – கைப்பிடி அளவு
உப்பு – தேவையான அளவு
கடுகு - 1/4 டீஸ்பூன்
இட்லி மாவு - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் காய விடவும். பின் அதனுடன் ஒரு கைப்பிடி அளவு வரமிளகாய் அதாவது கிட்டத்தட்ட 10 மிளகாயை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.
2. மிளகாயை நன்றாக வறுத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதே கடாயில் சிறிதளவு நெய் சேர்த்துக்கொண்டு, 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு 2 டீஸ்பூன் தனியா மற்றும் ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து வறுக்க வேண்டும். மிதமான சூட்டில் ஒரு 10 முதல் 15 நிமிடங்கள் வரை வறுக்க வேண்டும்.
3. நன்றாக வறுத்தவுடன் அடுப்பிலிருந்து எடுத்து சிறிது நேரம் குளிர வைக்க வேண்டும்.
4. மறுபுறம் இட்லி செய்துக்கொள்ளவும். குண்டூர் காரம் இட்லிக்கு குட்டி இட்லி செய்வதுதான் ருசியை கூட்டிக் கொடுக்கும். அதேபோல் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். தனியாக இட்லி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
5. இப்போது வறுத்து வைத்த அனைத்தையும் ஜாரில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு கலந்து அரைக்கவும். மிகவும் மென்மையாக அரைத்துவிடக்கூடாது. சற்று கொரகொரப்பாகவே அரைக்க வேண்டும்.
6. இப்போது மற்றொரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதனுடன் கடுகு மற்றும் சிறிது கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும். பின்னர் வேகவைத்த குட்டி இட்லியை சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது அரைத்து வைத்த பொடியை சேர்த்து நன்றாக கிளறி விடவும். அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன் சிறிதளவு நெய் சேர்த்துக்கொண்டால் மணமும் சுவையும் அள்ளும்.
இந்த குண்டூர் காரம் இட்லியை சூடாக கார சாரமாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு காரம் பிடிக்காது என்றால் சிறிது வரமிளகாயை குறைத்துக் கொள்வது நல்லது.