மால்புவா இனிப்பு வகை கிழக்கு இந்தியாவிலிருந்து தோன்றியதாகும். பூட்டான், இந்தியா, நேபாள், பங்களாதேஷ் போன்ற இடங்களில் இந்த இனிப்பு மிகவும் பிரபலமாகும். காலையில் பிரேக் பாஸ்டாக டீயுடன் சேர்த்து சாப்பிடலாம், அல்லது சாதாரணமாக இனிப்பு வகையாகவும் உண்ணலாம். இது மிகவும் பழமையான இனிப்பு வகை என்று கூறப்படுகிறது. ஹோலி, ஜென்மாஸ்டமி போன்ற விஷேச நாட்களில் இதை செய்வார்கள். சரி வாங்க, மால்புவாவை வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்.
மால்புவா செய்ய தேவையான பொருட்கள்:
மைதா -1 கப்.
ரவை -1/4கப்.
மில்க் பவுடர் -1/2கப்
பால் -1/2 கப்.
ஏலக்காய் பொடி - தேவையான அளவு.
சக்கரை - 1கப்.
குங்குமப்பூ - சிறிதளவு.
நெய் - தேவையான அளவு.
மால்புவா செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் மைதா, ரவை ¼ கப், மில்க் பவுடர் ½ கப், ஏலக்காய் பொடி சிறிதளவு சேர்த்து பால் ஊற்றி தோசைமாவு பதத்திற்கு நன்றாக கலக்கி 20 நிமிடம் மூடி வைத்து விடவும்.
இப்போது இன்னொரு பாத்திரத்தில் ½ கப் சக்கரை, தண்ணீர் ½ கப் சேர்த்து நன்றாக சக்கரை கரையும் வரை கிண்டவும். அதில் சிறிதளவு ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சிறிதளவு சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்கவும்.
இப்போது அடுப்பில் பேன் வைத்து அதில் நெய்யை ஊற்றிக்கொள்ளவும். ஊற வைத்திருக்கும் மாவை குழிக்கரண்டியில் எடுத்து சிறிதாக ஊற்றி, நன்றாக மாவு பொன்னிறமாக மாறும் வரை வைத்து இரண்டு பக்கமும் வேக விட்டு எடுக்கவும். பார்ப்பதற்கு பூரி போல இருக்கும். இப்போது இதை செய்து வைத்திருக்கும் சக்கரை பாகில் போட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும்.
கடைசியாக ஒரு தட்டில் ஊற வைத்த ஸ்வீட்டை அடுக்கி அதன் மீது பொடியாக வெட்டி வைத்த பிஸ்தாவை தூவி பரிமாறவும். அவ்வளவு தான் சுவையான மால்புவா தயார். நீங்களும் வீட்டிலே செய்து பார்த்துவிட்டு எப்படி இருந்தது என்று சொல்லுங்க.