நமது அன்றாட உணவில் கண்டுகொள்ளாமல் நம்மால் ஒதுக்கப்படும் காய்களில் சுண்டைக்காயும் ஒன்று!
கபத்தை நீக்கும். கொழுப்பைக் கரைக்கும். மலச்சிக்கல் போக்கும். செரிமானம் சீராக்கும். குடற்புழுக்களை அழிக்கும், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இப்படி எண்ணிலடங்காத நன்மைகளை கொண்டிருக்கும் சுண்டைக்காய்ப் பிஞ்சுகளின் முழுமையான பலன்கள் நமக்கு கிடைக்க இவற்றைத் துவையல் செய்து சாப்பிடுவதும் எளிய, சிறந்த வழியாகும்.
சுண்டைக்காயை வாரம் ஒருமுறையாவது உணவில் சேர்த்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்!
தேவையான பொருட்கள்:
சுண்டைக்காய் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 2
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
உ.ளுந்து - 2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு.
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் முதலில் கடலை பருப்பு, உளுந்து, காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும்.
அடுத்து காம்பு நீக்கி இரண்டாகக் கீறிய சுண்டைக்காயைச் சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.
இறுதியாக புளி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும். சிறிதளவு தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்து எடுத்தால் சுவையான சுண்டைக்காய் துவையல் தயார்.