முந்திரி கொத்து என்ற பெயரைக் கேட்டதும் இதை முந்திரிப்பருப்பு வைத்து தயாரிப்பார்கள் என நினைக்க வேண்டாம். இந்த இனிப்பு ரெசிபியில் பிரதானமாகப் பயன்படுத்தப்படுவது பாசிப்பருப்புதான். பாசிப்பருப்பில் புரோட்டின் சத்து அதிகம் உள்ளது என்பதால், அனைவருக்கும் ஒரு ஆரோக்கியமான உணவாக இது பார்க்கப்படுகிறது. இந்த ரெசிபியை ஒரு முறை செய்து வைத்தால் சுமார் ஒரு மாத காலம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். சரி வாருங்கள் இதை எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாசிப்பயறு - 2 கப்
தேங்காய் - 1 கப்
அரிசி மாவு - 1 கப்
வெல்லம் - 1 ½ கப்
மைதா மாவு - 2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - 4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்
எள் - 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் பாசிப்பயிரை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதை மிக்ஸியில் சேர்த்து அரைத்து, அதில் ஏலக்காய் தூள் சேர்த்து தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அதே கடாயில் எண்ணெய் சேர்க்காமல் துருவிய தேங்காய் சேர்த்து கருகாமல் வறுத்து, அதிலேயே எள் சேர்த்து வறுக்க வேண்டும். அடுத்ததாக அடுப்பில் பாத்திரம் ஒன்று வைத்து அதில் வெல்லத்தை சேர்த்து மிதமான தீ வைத்து வெல்லப்பாகு தயாரிக்க வேண்டும்.
வெல்லப்பாகில் அரைத்து வைத்துள்ள பாசிப்பருப்பு, தேங்காய் துருவல் மற்றும் சிறிதளவு நெய் சேர்த்து பிசைய வேண்டும். பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளுங்கள். பின்னர் அந்த உருண்டைகளை ஒரு மணி நேரம் வரை அப்படியே ஊற விட வேண்டும்.
இப்போது தனியாக ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, மைதா, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விட்டு தோசை மாவு பதத்திற்கு தயார் செய்து கொள்ளுங்கள். பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, அது சூடானதும் மிதமான தீ வைத்து பிடித்து வைத்துள்ள உருண்டைகளை மாவு கரைசலில் தொட்டு எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சூப்பர் சுவையில் முந்திரிக் கொத்து தயார்.