உங்கள் வீட்டில் காளான் இருக்கா? அப்படியானால் சூப்பரான சுவையில் மஸ்ரூம் போண்டா முயற்சி செஞ்சு பாருங்க. காளான் மிகவும் சத்தான உணவாகும். ஆனால் இதை பெரும்பாலானவர்கள் விரும்பி உண்பதில்லை. எனவே இதை போண்டாவாக செய்து கொடுக்கும்போது, அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாருங்கள் இந்தப் பதிவில் காளான் போண்டா எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
காளான் போண்டா செய்யத் தேவையான பொருட்கள்:
250 கிராம் காளான்
1 கப் கடலை மாவு
2 ஸ்பூன் அரிசி மாவு
1 வெங்காயம்
1 பச்சை மிளகாய்
1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
½ ஸ்பூன் சோம்பு
ஒரு கைப்பிடி கொத்தமல்லி தழை
தேவையான அளவு உப்பு
பொரிப்பதற்கு எண்ணெய்
காளான் போண்டா செய்முறை:
முதலில் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, மிதமான சூட்டில் சோம்பு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். வெங்காயம் மென்மையாக வெந்து, இஞ்சி பூண்டு பேஸ்ட் பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.
அடுத்ததாக நறுக்கிய காளான் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாகும் வரை சுமார் 5 நிமிடங்கள் அப்படியே சமைக்கவும். அடிப்பிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறி விடவும்.
ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, அரிசி மாவு, கொத்தமல்லி தழைகள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள். பின்னர் காளான் கலவையை மாவில் சேர்த்து பிசையவும்.
இப்போது ஒரு கடாயில் பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும், காளான் மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் மெதுவாக விடுங்கள். இறுதியாக போண்டா பொன்னிறமாக மாறியதும் வெளியே எடுத்தால் சூப்பரான சுவையில் காளான் போண்டா தயார்.
இதை இன்றே உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் செய்து கொடுங்கள். உண்மையிலேயே இதன் சுவை நன்றாக இருக்கும். காளான் பிடிக்காது என்பவர்களும் விரும்பி கேட்டு வாங்கிச் சாப்பிடுவார்கள். இந்த அற்புதமான ரெசிபியை முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.