கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து, சோடியம், சிறிதளவு துத்தநாகம், மாங்கனீசு, தாமிரம் போன்ற கனிமச்சத்துகள் உள்ளன. பல்வேறு சத்துக்கள் நிறைந்த கொண்டைக்கடலையைப் பயன்படுத்தி வித்தியாசமான சுவை கொண்ட மலபார் கொண்டைக்கடலை கறி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கருப்பு கொண்டைக்கடலை - 200 கிராம்
தேங்காய் துருவல் - 1 கப்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
கடுகு - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
சோம்புத்தூள் - அரை ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மலபார் கொண்டைக்கடலை கறி செய்வதற்கு முதலில் கொண்டைக்கடலையை குறைந்தது எட்டு மணி நேரம் வரை ஊறவைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நன்கு ஊறிய கொண்டைக்கடலையைப் போட்டு, அதனுடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு போட்டு, குக்கரை மூடி 7 விசில் விட்டு, வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் தேங்காய் துருவலைப் போட்டு லேசாக வறுத்து, அத்துடன் மல்லித்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுத்து ஆற வைத்துக்கொள்ளவும்.
வறுத்த பொருட்கள் நன்கு ஆறியதும், அவற்றை மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் போட்டு தாளித்து, அதனுடன் நறுக்கிய தக்காளி, சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும், அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவையும், தேவைக்கேற்ப கொண்டைக் கடலை வேகவைத்த தண்ணீரையும் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்ததும், அதில் வேக வைத்த கொண்டைக் கடலையை சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதித்ததும் இறக்கினால், சுவையான மலபார் கொண்டைக்கடலை கறி தயார்.