கீரைகளுக்கெல்லாம் ராஜா என அழைக்கப்படும் பொன்னாங்கண்ணிக் கீரை சாப்பிடுபவர்களுக்கு கண் தொடர்பான பிரச்னைகள் எதுவும் வராது. பொன் போல் சருமம் மின்னிட பொன்னாங்கண்ணிக் கீரை உதவும். உடலில் ஒரு மினுமினுப்பை தரக்கூடிய இந்த கீரையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இரும்புச்சத்து விட்டமின்கள் தாதுக்கள் நிறைந்தது.
தேவையானவை:
சீமை (சிகப்பு) பொன்னாங்கண்ணிக் கீரை 2 கைப்பிடி
துவரம் பருப்பு அரை கப்
பிரிஞ்சி இலை 1
பட்டை சிறு துண்டு
அன்னாசிப்பூ 1
ஏலக்காய் 2
கிராம்பு 2
மிளகு ஒரு ஸ்பூன்
வெங்காயம் ஒன்று
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
தக்காளி 2
மிளகு 2 ஸ்பூன்
உப்பு தேவையானது
செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பிரிஞ்சி இலை, பட்டை துண்டு, அன்னாசி பூ, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் நறுக்கியது போட்டு வதக்கவும். இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து பொடியாக நறுக்கிய தக்காளி, மிளகையையும் போட்டு நன்கு வதக்கவும்.
பொன்னாங்கண்ணிக் கீரை ரெண்டு கைப்பிடி அளவு எடுத்து சுத்தம் செய்து அதையும் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். அரை கப் துவரம் பருப்பை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். வேகவைத்த பருப்புடன் வதக்கிய தக்காளி வெங்காயம் பொன்னாங்கண்ணிக் கீரை ஆகியவற்றை சேர்த்து குக்கரில் வைத்து இரண்டு விசில் விட்டு எடுக்கவும். ஆறியதும் மத்தால் நன்கு மசிக்க அல்லது மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். மேலாக ஒரு ஸ்பூன் நெய்விட்டு பரிமாற மிகவும் சத்தான, சுவையான சூப் தயார்.