

மழைக்காலத்திற்கு ஏற்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், அதேசமயம் தொண்டை கரகரப்பிற்கு இதம் தரும் சில சூப் வகைகளைப் பார்க்கலாம். பொதுவாகவே மழைக்காலங்களில் வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் மிக்க உணவுகளை எடுத்துக்கொள்வதுடன், சூப்புகளையும் பருகுவது பருவக்கால தொற்றுகளில் இருந்து நம்மை காக்கும்.
பட்டாணி பூண்டு சூப்:
பட்டாணியில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து, பூண்டில் உள்ள ஆன்டி பாக்டீரியல், ஆன்டி மைக்ரோபியல் மற்றும் ஆன்டி இன்ஃப்ளமேட்டரி பண்புகள் இணைந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
பச்சை பட்டாணி 1/2 கப் உருளைக்கிழங்கு துண்டுகள் 1/4 கப் வெங்காயம் 1
பூண்டு 6
மிளகு 1 ஸ்பூன்
பிரியாணி இலை 1
சர்க்கரை 1/2 ஸ்பூன்
உப்பு தேவையானது
வெண்ணெய் ஒரு ஸ்பூன்
குட்டி குக்கரில் வெண்ணெயைப் போட்டு சூடானதும் பிரியாணி இலை, தோல் நீக்கி நசுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பட்டாணியையும், தோல் நீக்கி நறுக்கிய உருளைக்கிழங்கு துண்டுகளையும் சேர்த்து வதக்கி அதில் 2 கப் தண்ணீர் விட்டு தேவையான உப்பு, மிளகுத்தூள், சிறிது சர்க்கரை சேர்த்து 2 விசில் வரும் வரை வேக விடவும். பிரஷர் அடங்கியதும் கரண்டியால் நன்கு மசித்து விட்டு பிரியாணி இலையை எடுத்துவிட்டு சூடாக பரிமாறவும்.
முருங்கைக்காய் சூப்:
ஆரோக்கியமானதும் சுவையானதுமான முருங்கைக்காய் சூப் செய்வதும் எளிது ருசியும் அதிகம்.
முருங்கைக்காய் 1
முருங்கை கீரை 1/4 கப்
முருங்கைப்பூ 1/4 கப்
துவரம் பருப்பு 2 ஸ்பூன்
சீரகத்தூள் 1 ஸ்பூன்
மிளகு 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் சிறிது
துவரம் பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து சற்று கொரகொரப்பாக பொடிக்கவும். முருங்கைக்காயை சிறிது பெரிதாக நறுக்கி வேகவைத்து அதன் உள்ளிருக்கும் சதையை ஸ்பூனால் வழித்தெடுக்கவும். குட்டி குக்கரில் முருங்கைக் கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி சேர்த்து, உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், முருங்கைப்பூ பொடியாக நறுக்கியது, முருங்கைக்காய் விழுது, பொடித்த துவரம் பருப்பு, மஞ்சள் தூள், 3 கப் தண்ணீர் விட்டு 2 விசில் விட்டு வேகவிடவும். பிறகு திறந்து ஒரு ஸ்பூன் வெண்ணெய் போட்டு மத்தால் சிறிது மசித்து சுட சுட பருக ஆஹா அமிர்தம்தான் தொண்டைக்கு இதம்தான்.
இஞ்சி தனியா சூப்:
பசியைத் தூண்டும். மழைக்காலத்தில் உணவை நன்கு ஜீரணமாக்க உதவும்.
தனியா 2 ஸ்பூன்
மிளகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1/4 ஸ்பூன்
இஞ்சி சிறிது
கறிவேப்பிலை சிறிது
உப்பு தேவையானது
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
சர்க்கரை 1/2 ஸ்பூன்
கார்ன்ப்ளாவர் 1 ஸ்பூன்
தனியா, சீரகம், மிளகு ஆகியவற்றை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். இத்துடன் கறிவேப்பிலை, தோல் சீவி நறுக்கிய இஞ்சித் துண்டுகள் சேர்த்து மிக்ஸியில் 1/2 கப் தண்ணீர்விட்டு நன்கு அரைக்கவும். அரைத்த விழுதில் இரண்டு கப் தண்ணீர்விட்டு கலக்கி நன்கு வடிகட்டவும். இதில் உப்பு தேவையானது, சிறிது சர்க்கரை(ருசியைக் கூட்ட) சேர்த்து கொதிக்கவிட்டு கடைசியாக ஒரு ஸ்பூன் கார்ன்ப்ளார் மாவை கரைத்து விட்டு (கெட்டியாக இருக்க) இறக்கவும். கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து சூடாகப் பருக தொண்டைக்கு இதம். பசியைத்தூண்டும்.