பாசிப்பயிறு பயன்படுத்தி விதவிதமாக கூட்டு பொரியல் பாயசம் என சாப்பிட்டிருப்பீர்கள், ஆனால் இதை பயன்படுத்தி சுவையான ரசம் செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? சாதத்தில் இந்த ரசத்தை ஊற்றி சாப்பிடும்போது சுவை அருமையாக இருக்கும். பாசிப்பயிரில் உடலுக்குத் தேவையான விட்டமின்கள் நிறைந்துள்ளது. அது நமது ரத்த ஓட்டத்தை சீராக்கி, சர்க்கரை நோயின் பாதிப்பை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது. எனவே இந்த ஆரோக்கியம் நிறைந்த பாசிப்பயறு ரசம் எப்படி செய்வது என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பாசிப்பயிறு கடைசலுக்கு தேவையான பொருட்கள்:
பாசிப்பயறு - 1 கப்
மிளகு - ½ ஸ்பூன்
மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
சீரகம் - ½ ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
பெருங்காயம் - ¼ ஸ்பூன்
பூண்டு - 5 பல்
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - சிறிதளவு
மிளகாய் தூள் - ½ ஸ்பூன்
கடுகு - ½ ஸ்பூன்
வரமிளகாய் - 2
ரசம் செய்ய தேவையான பொருட்கள்:
வரமிளகாய் - 2
பூண்டு - 5 பல்
புளி - நெல்லிக்காய் அளவு
தக்காளி - 1
ரசப்பொடி - 2 ஸ்பூன்
பெருங்காயம் - ½ ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான
மல்லித்தழை - சிறிதளவு
கடுகு - ½ ஸ்பூன்
செய்முறை:
முதலில் பாசிப்பயறை சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் குக்கரில் வறுத்த பாசிப்பயறு, மஞ்சள் தூள் மிளகாய் தூள் வரமிளகாய் சீரகம், மல்லி, மிளகு, பெருங்காயத்தூள் உப்பு பூண்டு ஆகியவை அனைத்தையும் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும். 5 முதல் 6 விசில் விட்டால் பாசிப்பயறு நன்கு வெந்துவிடும்.
பின்னர் அந்த நீரை வடித்து தனியாக வைத்துக்கொண்டு, மற்ற பொருட்களை ஒன்றாக சேர்த்து கடைந்து விடவும். பின்னர் கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை மிளகாய் போன்றவற்றை தாளித்து கடைந்த பயறில் சேர்த்து கலக்குங்கள்.
அடுத்ததாக ரசம் செய்வதற்கு எப்போதும் நீங்கள் பின்பற்றும் முறையை அப்படியே பின்பற்றி, இறுதியில் பயறு வேக வைத்த தண்ணீரை அதில் சேர்த்து கொதிக்க விட்டு இறக்குங்கள்.
பச்சை பயிறு ரசம் என்றதும், கடைந்து வைத்துள்ள பயறையும் ரசத்தையும் ஒன்றாக கலந்து விட வேண்டாம். பயறு கடைசலை நேரடியாக சாதத்தில் போட்டு பிசைந்து, அதில் கொஞ்சம் ரசம் சேர்த்து சாப்பிட்டால் சுவை டாப் டக்கராக இருக்கும். பயிறு வேக வைத்த தண்ணீரை ரசத்திற்கு பயன்படுத்தியுள்ளதால், அதன் சுவை முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். ஒருமுறை இந்த ரெசிபியை முயற்சித்துப் பார்த்து எப்படி இருந்ததென்று எங்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.