இதுவரை நீங்கள் எத்தனையோ விதமான கட்லெட் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள், ஆனால் பச்சை பயிறு பயன்படுத்தி எப்போதாவது கட்லட் செய்ததுண்டா?. உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு ஏதேனும் செய்துத் தர விரும்பினால், இந்த பச்சைப் பயறு கட்லெட் செய்து கொடுங்கள். சரி வாருங்கள் இதை எப்படி எளிதாகச் செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சைப்பயிறு - 1 கப்
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ½ ஸ்பூன்
சீரகத்தூள் - ½ ஸ்பூன்
கரம் மசாலா - ½ ஸ்பூன்
மிளகாய்த்தூள் - ½ ஸ்பூன்
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
பிரட் கிரம்ஸ் - 1 கப்
எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஊற வைத்த பச்சைப் பயறை நன்கு கழுவி பிரஷர் குக்கரில் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 3 முதல் 4 விசில்கள் விட்டு மென்மையாக வேக வையுங்கள்.
பின்னர் குக்கரில் உள்ள தண்ணீரை வடித்துவிட்டு பச்சைப் பயறை தனியாக எடுத்து குளிர்விக்கவும். குளிர்ந்த பச்சைப் பயறை ஒரு கிண்ணத்தில் போட்டு, அத்துடன் உருளைக்கிழங்கு சேர்த்து இரண்டையும் ஒன்றாகப் பிசைந்து கொள்ளுங்கள்.
மசித்து வைத்துள்ள கலவையில், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, சீரகத்தூள், கரம் மசாலா, சிவப்பு மிளகாய் தூள், கொத்தமல்லித்தழை மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து அனைத்தும் நன்றாகக் கலக்கும்படி பிசையவும்.
பின்னர் இந்தக் கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, கட்லெட் வடிவத்திற்கு தட்டிக் கொள்ளுங்கள். அடுத்ததாக கட்டிலட்டை பிரட் கிரம்ஸில் பிரட்டி, ஒரு வாணலியில் பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய் சேர்த்து சூடானதும், கட்லெட்டுகளை கவனமாகப் பொரித்தெடுக்கவும்.
கட்லெட்டுகள் பொன்னிறமாக மாறியதும், எண்ணெயிலிருந்து எடுத்து சூடாக சாப்பிடப் பரிமாறுங்கள். இதன் சுவை உண்மையிலேயே சூப்பராக இருக்கும். ஒருமுறை முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.