இன்று பல வீடுகளில் முருங்கை மரங்களைக் காண்பதைப் போல் அன்று பலரது வீடுகளில் கல்யாண முருங்கை மரங்கள் எனப்படும் மருத்துவ குணத்தில் சிறந்த முள்ளு முருங்கை மரங்களைக் காணலாம். முருங்கைபோல் கிளைகளை வெட்டி வைத்தால் வேர் பிடித்து வளரும் தன்மையுடையது. மரத்தின் தண்டில் முட்கள் ஆங்காங்கே இருப்பதால், ‘முள்’முருங்கை என்ற பெயர் இதற்கு.
"ஆண்களுக்கு முருங்கை… பெண்களுக்குக் கல்யாண முருங்கை’ எனும் உடல்நலம் குறித்த கிராமத்து மொழியே இதன் சிறப்புக்கு சான்று. ஏனெனில் ஆண்களுக்கு வலிமையையும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னை களுக்கு நிவாரணம் தருவதிலும் சிறந்ததாகிறது முள்ளு முருங்கை இலைகள். இந்த இலைகளில் ‘எரிகிரிஸ்டாகேலின்’ எனும் வேதிப்பொருள் இருப்பதன் காரணமாக, கல்யாண முருங்கைக்கு பாக்டீரியாக்களைத் தடுத்தாட்கொள்ளும் சக்தி இருப்பதாக மருத்துவ ஆய்வு குறிப்பிடுகிறது.
முள்ளு முருங்கை வைத்து செய்யப்படும் குட்டி பூரிகள் அல்லது வடைகள்தான் பாங்கராபான் பைரி என மதுரை வீதிகளில் தரப்படும் மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக மக்களைக் கவர்கிறது. குருணை அரிசியுடன் முள்ளு முருங்கை கீரை, கொஞ்சம் சீரகம், கொஞ்சம் மிளகு, உப்பு சேர்த்து சுடப்படும் வடைதான் பங்கராபான் பைரி (எ) முள்ளுமுருங்கை வடை.
முள்ளு முருங்கையோடு மிளகும் சீரகமும் சேர்ந்துள்ளதால் இதை சாப்பிட்டால் சளி இருமலில் இருந்து விடுபட்டு நலன் பெறலாம் என்பதால் சௌராஷ்டிர மக்களின் ஸ்பெஷல் ரெசிபி ஆன இந்த பங்கராபான் பைரிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு
இதன் செய்முறை பார்ப்போம்.
தேவை:
இட்லி அரிசி - 2 கப்
முள்ளு முருங்கை இலை - 2 கப்
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
அரிசி மாவு - 1/2 கப் ( தேவைப்பட்டால்)
எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
இட்லி அரிசியை நன்கு கழுவி குறைந்தது 6 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊறவைக்கவும். முள்ளு முருங்கை இலையை நன்றாக சுத்தம் செய்யவும். முதலில் முள்ளு முருங்கை இலை மற்றும் மிளகை சேர்த்து மிக்சியில் இட்டுச் சிறிது தண்ணீரை தெளித்து நைசாக அரைத்து தனியே வைக்கவும். அதே மிக்ஸியில் நன்கு ஊறிய அரிசி மற்றும் உப்பை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி சற்றே கொரகோரப்பாக அரைத்து அதனுடன் அரைத்த முள்ளு முருங்கை இலைக் கலவையை நன்கு கலந்து கூடவே அரிசி மாவை சேர்த்து சற்று கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இந்த மாவை அப்படியே சில நிமிடங்கள் ஊறவைக்கவும்.
இப்போது ஒரு வாணலியில் தேவையான எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் இறுகப் பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி வடைகளாகத் தட்டி போட்டு இருபுறமும் சிவக்க எடுக்க வேண்டும். இதன் மேல் உளுத்தம்பருப்பு, மிளகாய், மிளகு பெருங்காயம் சேர்த்து வறுத்த பருப்புப் பொடி தூவி சாப்பிட ருசியும் அள்ளும். மழைக்கால குளிருக்கு இதமாக சளியையும் விரட்டும்.