உங்கள் வீட்டு சுட்டி குழந்தைகளுக்கு மாலை வேளையில் சூப்பர் ஸ்னாக் ஏதாவது செய்து கொடுக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டிலேயே சுவையான பானி பூரி செய்து கொடுங்கள். வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் செய்யப்படும் பானி பூரியை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். குறிப்பாக மழைக் காலங்களில் பானி பூரி செய்து சாப்பிட்டு பாருங்கள் வேற லெவலில் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
நீங்கள் கஷ்டப்பட்டு பானி பூரிக்கு மாவு பிசைந்து செய்ய வேண்டும் என அவசியம் இல்லை. இப்போதெல்லாம் ரெடிமேடாக குறைந்த விலையில் பானி பூரி கிடைக்கிறது. அதை வாங்கி வந்து எண்ணெயில் விட்டு பொரித்தால் பானிப் பூரி தயார்.
உருளைக்கிழங்கு மசாலா:
உருளைக்கிழங்கு - 3
வெங்காயம் - 1
சாட் மசாலா - 1 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
பானி தயாரிக்க:
கொத்தமல்லி - 1 கப்
இஞ்சி - சிறிய துண்டு
புதினா - ½ கப்
புளி - ஒரு எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் - 3
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
வெல்லம் - 2 ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
சாட் மசாலா - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு நன்றாகப் பிசைந்து கொள்ளுங்கள். பின்பு அதில் வெங்காயம், சீரகத்தூள், சாட் மசாலா, உப்பு, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்ந்து ஒன்றாகப் பிசைந்தால் உருளைக்கிழங்கு மசாலா தயார்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி, புதினா, இஞ்சி, புளி பச்சை மிளகாய், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதை ஒரு சிறிய பாத்திரத்திற்கு மாற்றி ஒரு கப் தண்ணீர் ஊற்றி, சாட் மசாலா, வெல்லம், சீரகத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கினால் பானி தயார்.
பானிபூரிக்கு தேவையான அனைத்தும் தயாராகிவிட்டது. பானி பூரியை எடுத்து அதன் நடுவே துளையிட்டு, உள்ளே கொஞ்சம் உருளைக்கிழங்கு மசாலா வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதில் தயாரித்து வைத்துள்ள பானி தண்ணீரை ஊற்றி அப்படியே எடுத்து வாயில் போட்டு சாப்பிடுங்கள். உண்மையிலேயே சூப்பர் சுவையில் இருக்கும்.