சோமவல்லி, அமிர்தவல்லி, அமிர்தை, குண்டலி, அமிர்தக்கொடி போன்ற பல பெயர்களைக்கொண்ட சீந்தில் மூலிகை, பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது. சீந்தில் (Tinospora cordifolia) என்பது மரங்களில் ஏறிப் படரும் ஒரு வகை மூலிகைத் தாவரம். இக்கொடி தண்டின் மேல் பகுதி தடித்த தோலுடன் மெல்லிய காகிதம் போன்ற படலம் மூடி இலைகள் இதய வடிவில் இருக்கும். சீந்தில் கொடியை அறுத்து விட்டாலும் உலர்ந்து போகாமல் காற்றில் உள்ள நீரை உறிஞ்சி வாழும் தன்மை உடையது.
சீந்தில் கொடியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் தரக்கூடியதாகும். இது செரிமானமின்மை, உடல் வலி, சோர்வு ஆகியவற்றுக்கு சிறந்த மருந்தாகக் திகழ்கிறது. சித்த மருத்துவம் சீந்தில் கொடியை கற்ப மருத்துவ குணம் (மனிதன் நீண்ட நாள் உயிர் வாழ உதவுவது என்பது பொருள்) கொண்டதாகக் கூறுகிறது. இது நீரிழிவு பாதிப்பு, கல்லீரல், மண்ணீரல் ஆகிய உடல் உறுப்புகளை பலமடையச் செய்யும் தன்மை கொண்டது.
சீந்தில் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து சிறுநீரக செயலிழப்பு, ஆண்மைத்தன்மை குன்றுதல் போன்ற நோய்களுக்கும் மருந்தாகக் கொடுக்கப்படுகிறது. மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறுகள், நாள்பட்ட காய்ச்சல் மற்றும் சீதபேதியை குணமாக்கும் சக்தி கொண்டது சீந்தில் என்கிறது சித்த மருத்துவம்.
கல்லீரல் பாதிப்புகளை குணமாக்க காலம் காலமாக இந்திய ஆயுர்வேத மருத்துவத்தில் சீந்தில் கொடி மருத்துவமே கையாளப்பட்டு வருகிறது. தற்போது அதன் மருத்துவ குணத்தை உறுதி செய்யும் விதமாக, ‘கிரேட் பிரிட்டன் ராயல் பார்மசூட்டிகல் சொசைட்டி’ தனது ஆய்வறிக்கையை மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சீந்தில் இலையில் உள்ள மருத்துவ குணம் கல்லீரல் நோய்களுக்கும் சிறந்த நிவாரண மருந்தாகப் பயன்படுகிறது என்பது சர்வதேச அளவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆயுளை நீட்டிக்கும் அதிசய மூலிகையாக இந்திய மருத்துவத்தில் பயன்படும் சீந்தில், இளமையைக் காத்து தீராத பிணிகளை அகற்றி உடல் நலனை மீட்டெடுக்க பெரிதும் உதவுகிறது. என்றும் வாடாமல் பல பருவங்களைக் கடந்து வாழும் மூலிகையான சீந்தில், நம் மனித குலத்துக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷ மருந்து என்றால் அது மிகையாகாது.