
வேர்க்கடலை இருந்துவிட்டால் போதும். விதவிதமான ரெசிபிகளை அதில் செய்து அசத்தலாம். கூட்டு, குழம்பு, பொரியல், பிரியாணி, ப்ரைட் ரைஸ் அனைத்திற்கும் பக்கவாத்தியமாக இருப்பது வேர்க்கடலை. அவற்றைக் கொண்டு செய்யப்படும் இரண்டு ரெசிபிகளை இதில் பார்ப்போம்.
வெந்தயக்கீரை பிரியாணி:
செய்ய தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி- ஒரு கப்
பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை -ஒரு கப்
நீளமாக நறுக்கிய வெங்காயம்- கால் கப்
நீளமாக நறுக்கிய கேரட்- ஒன்று
வேகவைத்த உருளைக்கிழங்கு -ரெண்டு
வேர்க்கடலை -ஒரு டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய்- 4
பிரிஞ்சி இலை- ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது -ஒரு டீஸ்பூன்
நெய், எண்ணெய், உப்பு- தேவையான அளவு
செய்முறை:
பாஸ்மதி அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைத்து நெய்யில் ஈரம் போக வறுத்து வைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு வேர்க்கடலை, பிரிஞ்சி இலை, தாளித்து, கீறிய பச்சை மிளகாய், வெங்காயம் போன்றவற்றை போட்டு வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி வெந்தயக்கீரை போட்டு லேசாக வதக்கி கேரட்டையும் அதனுடன் சேர்க்கவும்.
பின்னர் வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்குடன் ஒரு டீஸ்பூன் சாம்பார் பவுடர் சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பு போட்டு அரிசியை சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கி நெய் விடவும். சிறிதளவு எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்றாக கிளறிவிட்டு பரிமாறவும். கேரட் உருளைக்கிழங்கு வேர்கடலை சேர்த்து இருப்பதால் வெந்தயக்கீரை கசப்பு தெரியாமல் இருக்கும். இதனால் சாப்பிட ருசியாக இருக்கும்.
கத்திரிக்காய் வேர்க்கடலை கூட்டு:
செய்ய தேவையான பொருட்கள்:
ஒரே அளவுள்ள கத்திரிக்காய்- 10
எண்ணெய்- இரண்டு டேபிள் ஸ்பூன்
அறிந்த பெரிய வெங்காயம் -ஒன்று
வறுத்துப் பொடிக்க தோல்நீக்கிய வேர்க்கடலை- இரண்டு டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு _ஒன்றரை டீஸ்பூன்
துருவிய தேங்காய்- ஒரு டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 4
கருவேப்பிலை- ஒரு ஆர்க்கு
உப்பு- தேவையான அளவு
வெள்ளை எள்ளு- ஒரு டீஸ்பூன்
ஆம்ச்சூர் பவுடர் -ஒரு டீஸ்பூன்
செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வறுக்க கொடுத்துள்ளவற்றை வறுத்து உப்பு சேர்த்து பொடித்து அவற்றை கத்திரிக்காயின் நான்கு பாகத்தில் கீறிவிட்டு ஸ்டாப் செய்யவும். பின்னர் கடாயில் எண்ணெய்விட்டு காய்ந்தவுடன் கத்திரிக்காயை போட்டு மெல்ல பிரட்டி வேகவைத்து எடுத்து வைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் ஒரு பெரிய வெங்காயத்தை அரிந்து வதக்கி, மீதமுள்ள பொடியை தூவி கருவேப்பிலை போட்டு வதக்கி கத்தரிக்காய நன்றாக கிளறிவிட்டு இறக்கி பரிமாறவும். மிகவும் ருசியுடன் இருக்கும். புளிப்புக்கு விருப்பப்பட்டால் சிறிது ஆம்ச்சூர் பவுடர் சேர்த்து பிரட்டி எடுத்துக் கொள்ளலாம் மிகவும் ருசியாக இருக்கும்.