

-ஆ.நர்மதா
நம் வீடுகளில் செய்யும் சாம்பாரை விட கல்யாண வீடுகளில் செய்யும் சாம்பார் மிகுந்த சுவையுடையதாக இருக்கும். இப்படிப்பட்ட கல்யாண வீட்டு சாம்பார் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 300 கிராம்
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
பாசிப்பருப்பு - 100 கிராம்
சின்ன வெங்காயம் -தேவையான அளவு
தக்காளி - மூன்று
பச்சை மிளகாய். - மூன்று
கத்தரிக்காய். - 50 கிராம்
கேரட். - 50 கிராம்
முருங்கைக்காய். - மூன்று
உருளைக்கிழங்கு - 50 கிராம்
முள்ளங்கி. - 50 கிராம்
பீன்ஸ். - 50 கிராம்
அவரைக்காய். - 50 கிராம்
பெருங்காயத்தூள் -தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு
சாம்பார் பொடி - தேவையான அளவு
மஞ்சள் பொடி. - தேவையான அளவு
மல்லி. - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கருவேப்பிலை. - தேவையான அளவு
கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
வத்தல் - நான்கு
தேங்காய். - 5 டேபிள்ஸ்பூன்
உளுந்து - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
சீரகம். - 1 டேபிள்ஸ்பூன்
மல்லித்தழை. - தேவையான அளவு
செய்முறை:
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, சீரகம், வத்தல், மல்லி, துருவிய தேங்காய், வெந்தயம் இவற்றை மேலே கூறிய அளவு எடுத்துக் கொண்டு ஒரு வாணலியில் சேர்த்து நன்கு சிவந்து வரும் வரை வறுத்துக்கொள்ளவும். இவை நன்கு ஆறியவுடன் மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். துவரம் பருப்பு, பாசிப்பருப்பு இரண்டையும் நன்கு கழுவி குக்கரில் சேர்த்து தேவையான அளவு நீர் ஊற்றி மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து நான்கு விசில் வரும் வரை வேகவைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் கடுகு, வெந்தயம், உளுந்து, கருவேப்பிலை சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து நன்கு மையாகும் வரை வதக்கி கொள்ளவேண்டும். அதனுடன் கத்தரிக்காய், கேரட், முள்ளங்கி, பீன்ஸ், அவரைக்காய்,உருளைக்கிழங்கு, முருங்கைக்காய் சேர்த்து நன்கு வதக்கவேண்டும்.
காய்கறிகள் நன்கு வதங்கியவுடன் தேவையான அளவு உப்பு, நாம் அரைத்து வைத்திருந்த மசால் பொடி சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும். தேவையான அளவு நீர் ஊற்றி காய்கறிகளைக்கொதிக்க வைக்கவேண்டும். காய்கறிகள் நன்கு கொதித்தவுடன் நாம் வேக வைத்திருந்த பருப்பையும் உடன் சேர்ந்து ஐந்து நிமிடங்கள் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் இதனுடன் புளி கரைத்த நீரையும் சேர்த்து கொதிக்க வைக்க, இறுதியாக மல்லித்தழை சேர்த்து இறக்க வேண்டும். கமகமக்கும் கல்யாண வீட்டு சாம்பார் தயார்.