

உணவு என்பது பசியை போக்குவது மட்டுமல்லாமல் மனிதனின் உணர்வுகளோடு கலந்தது. சுவையான உணவு என்றாலே அளவிற்கு அதிகமாகவே உட்கொள்வர். அதிலும் இனிப்பு வகைகள் அனைவருக்கும் பிடித்தமான உணவு. இனிப்பு என்றால் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவர். விழாக்காலங்களிலும், விசேஷ வீடுகளிலும் உணவு பரிமாறிய பின் கடைசியாக பாயாசம் வைப்பது பாரம்பரியமான ஒன்றாகும். சுவை மிகுந்த கமகமக்கும் பாயசம் எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி - 250 கிராம்
சேமியா - 100 கிராம்
பால் - 1 லிட்டர்
முந்திரி - 10 கிராம்
உலர் திராட்சை - 10 கிராம்
ஏலக்காய் பொடி - தேவையான அளவு
சர்க்கரை - 200 கிராம்
உப்பு - குறைந்த அளவு
நெய் - 50 கிராம்
குங்குமப்பூ. – சிறிதளவு
செய்முறை:
ஜவ்வரிசியை நன்கு கழுவி 15 நிமிடம் ஊறவைத்துக் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். ஜவ்வரிசி நன்கு உரிய உடன் அதனை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் அதனுடன் சேமியா சேர்த்து ஒரு லிட்டர் பால் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவேண்டும். சேமியாவும், ஜவ்வரிசியும் நன்கு வெந்து வந்தவுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவேண்டும். ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு பால் ஊற்றி அதனுடன் குங்குமப்பூ சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, உலர் திராட்சையை நன்கு சிவந்து வரும்படி வறுத்துக்கொள்ள வேண்டும். இதனை கொதிக்க வைத்த பாலில் சேர்த்து தேவையான அளவு ஏலக்காய் பொடி கரைத்து வைத்திருந்த குங்குமப்பூ பால், சிறு சிட்டிகை உப்பு , நெய் ஊற்றி இரண்டு நிமிடங்கள் கொதிக்கவைக்க வேண்டும். குங்குமப்பூவை பாலில் கலந்து சேர்ப்பதன் மூலம் பாயாசத்திற்கு ஒரு இயற்கையான கலர் மட்டும் சுவை கிடைக்கும்.
எந்த ஒரு இனிப்பு பலகாரத்திலும் சிறிய அளவு உப்பு சேர்ப்பது அதன் சுவையை மேலும் அதிகரிக்கும். பாலில் உள்ள புரோட்டின் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றன. இதில் ஏலக்காய் மற்றும் முந்திரி திராட்சை சேர்ப்பதனால் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைத் தருகிறது. பாயாசம் வயிற்றுக்கு குளிர்ச்சியைத் தருவதுடன் செரிமானத்திற்கு உதவுகிறது. பாலில் உள்ள கால்சியம் எலும்புகளைப் பலப்படுத்தும்.
மேலும் இதில் உள்ள நெய் சருமத்தைப் பளபளப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உட்கொள்ளும் சுவை மிகுந்த கமகமக்கும் பால் பாயாசம் தயார். கடைகளில் கிடைக்கும் பாயாசம் ப்ரீ மிக்ஸ் பயன்படுத்துவதை காட்டிலும் நம் வீட்டிலேயே தயாரிப்பது ஆரோக்கியமானதாக இருக்கும்.