கருப்பு எள்ளில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. இதயத்திற்கு நல்லது, எலும்பை வலுப்படுத்தும், ஜீரணத்திற்கு மிகவும் நல்லதாகும். பெண்களின் மாதவிடாய்ப் பிரச்சனையை சரி செய்யும். முடி வெடிப்பு மற்றும் முடி கொட்டுதல் போன்றவற்றை போக்கும். வறுத்த எள்ளை வெறுமனே தினமும் ஒரு தேக்கரண்டி சாப்பிடுவது உடலுக்கு நல்லதாகும்.
அத்தகைய பயனுள்ள கருப்பு எள்ளை வைத்து இன்று சட்டென்று ஒரு சாதம் செய்யலாம் வாங்க.
எள்ளு பொடி சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
வெள்ளை உளுந்து-1 தேக்கரண்டி.
கடலை பருப்பு-1 தேக்கரண்டி.
காய்ந்த மிளகாய்-5
கருவேப்பிலை-சிறிதளவு.
துருவிய தேங்காய்- 2 தேக்கரண்டி.
கருப்பு எள்ளு-1/4 கப்.
கல் உப்பு -1 தேக்கரண்டி.
நெய்-2 தேக்கரண்டி.
சாதம்-3 கப்.
கடுகு-1 தேக்கரண்டி
சீரகம்-1தேக்கரண்டி.
வேர்கடலை -1 தேக்கரண்டி.
முந்திரி-1 தேக்கரண்டி.
எள்ளு பொடி சாதம் செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு கடாயில் வெள்ளை உளுந்து 1 தேக்கரண்டி, கடலை பருப்பு 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் 5, கருவேப்பிலை சிறிது சேர்த்து நன்றாக வறுக்கவும். பிறகு துருவிய தேங்காய் 2 தேக்கரண்டி, கருப்பு எள் ¼ கப், கல் உப்பு 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக வறுக்கவும். பிறகு அதை மிக்ஸியிலே மாற்றி அரைத்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது ஒரு கடாயில் 2 தேக்கரண்டி நெய் ஊற்றி அதில் கடுகு 1 தேக்கரண்டி, ஜீரகம் 1 தேக்கரண்டி, வேர்கடலை 1 தேக்கரண்டி, முந்திரி 1 தேக்கரண்டி போட்டு நன்றாக வதக்கவும். பிறகு வடித்த சாதம் 3 கப்பை சேர்த்து அத்துடன் அரைத்து வைத்திருக்கும் எள்ளு பொடியை சேர்த்து நன்றாக கிண்டவும். இதை இரண்டு நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும். இப்போது சுவையான எள்ளு பொடி சாதம் தயார். எள்ளு பொடி சாதத்தில் நிறைய மருத்துவ குணம் இருப்பது மட்டுமல்லாமல் சாப்பிடவும் சுவையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.