ஆறு சுவைகளில் ஒன்று புளிப்பு. இந்த சுவை நம் உடல் நலனுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. புளிப்பு சுவையுடைய புளிய இலைகள் எண்ணற்ற நன்மைகளைத் தருகின்றன. சிந்த சிகுரு என்பது இளம் புளியங்கொழுந்து. இது குறிப்பிட்ட காலங்களில்தான் கிடைக்கும். தெலங்கானாவில் இந்த இளம் புளிய இலைகளின் தளிர்களைப் பயன்படுத்தி சிந்த சிகுரு பப்பு, புளிஹோரா, பச்சடி என வெரைட்டியாக செய்து உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். ஜூன் மாதத்தில் பரவலாக கிடைக்கும் இந்த சிந்த சிகுரு சுவையான உணவு மட்டுமல்லாது பல நோய்கள் வராதவாறு தடுத்து நிறுத்தும் தன்மையுடையது
சிந்த சிகுரு மஞ்சள் காமாலை மற்றும் நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது. மேலும், அல்சரைக் குணப்படுத்த உதவுகிறது., முழு உடலையும் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் உயர் இரத்த அழுத்தத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதோடு, நல்ல கொலஸ்ட்ராலின் அளவையும் அதிகரிக்கும். நன்மைகள் பல நிறைந்த புளிய இலைக் கொழுந்துகளைப் பயன்படுத்தி செய்யும் சுவையான உணவான தெலங்கானா சிந்த சிகுரு பச்சடி செய்முறையைப் பார்ப்போம்.
தேவை:
இளம் புளிய இலைகள் – 1 கப். வேர்க்கடலை ½ கப். வர மிளகாய் – 8, சீரகம்- 1 டீ ஸ்பூன், பூண்டு – 3 பற்கள், புளி- சிறிது, .உப்பு- தேவைக்கேற்ப
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்ப,சீரகம்,- தலா 1 டீ ஸ்பூன், வெங்காயம் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
முதலில் புளிய இலைகளை நீரில் நன்கு சுத்தப் படுத்தி ஈரமில்லாமல் வடிகட்டி வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வேர்க்கடலையை வறுத்து தனியே வைக்கவும். அதே கடாயில் மேலும் சிறிது எண்ணெய் விட்டு வர மிளகாயை வறுத்து எடுத்த பின் புளிய இலைகள், சீரகம், பூண்டுப் பற்களைப் போட்டு சுருள வதக்கி எடுக்கவும். பின் வறுத்தவற்றை உப்பு, புளி சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில், மைய அரைக்கவும்.
எண்ணெயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கிய பின் அரைத்த விழுதை சேர்த்து சிறிது வதக்கி எடுக்க வேண்டும். ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த சிந்த சிகுரு பச்சடியை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்,
இந்தப் பருவத்தில் பரவலாகக் கிடைக்கும் அற்புத பலன்கள் நிறைந்த புளியந்தளிர்களை உணவில் பயன் படுத்தி நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தவோம்.