

கிச்சனில் ஸ்மார்ட் பெண்மணியாக மாறுவதற்கான பயனுள்ள குறிப்புகள் சில. சமையலில் செய்யும் சின்ன சின்ன மாற்றங்கள் சமையலை அதிகம் ருசிக்கச் செய்யும்.
தக்காளியை சீக்கிரம் வதக்குவதற்கு ஒரு எளிய டிப்ஸ். தக்காளிகளை துண்டுகளாக்கி வாணலியில் போட்டு வதக்கும் போது சிறிது உப்பையும் சேர்த்து வதக்க வேகமாக வதங்கிவிடும்.
காலை அவசரத்தில் சமைக்கும் பொழுது வாணலியில் மசாலா பொருட்களை வதக்கும்பொழுது கவனக் குறைவால் கருகிவிடலாம். உடனே அதன் சுவை மாறாமல் இருப்பதற்கு இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்துவிட ருசியும் மணமும் மாறாமல் இருக்கும்.
மாலை டிபனுக்கு பஜ்ஜி செய்யும்போது பஜ்ஜிமாவுடன் ஒரு கரண்டி அளவு தோசை மாவு சேர்த்து செய்ய பஜ்ஜி மொறுமொறுப்பாகவும், உப்பியும் வரும்.
வடைக்கு மாவு அரைக்கும்போது தண்ணீர் அதிகமாகி சிறிது நீர்த்து விட்டால் கவலைப்படாமல் ஒரு ஸ்பூன் ரவை, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து ஐந்து நிமிடங்கள் வைக்க மாவு இறுகிவிடும். பிறகென்ன புசுபுசு வடை தயார்.
முட்டைகளை வாணலியில் வறுக்கும் சமயம் அவை வாணலியில் ஒட்டிக்கொள்ளும். அப்படி ஒட்டாமல் வருவதற்கு வாணலியில் இரண்டு சிட்டிகை உப்பும் சிறிது எண்ணெயும் சேர்த்து வறுக்க வாணலியின் அடிப்பகுதியில் ஒட்டாமல் வரும்.
வைக்கும் குழம்பு மணத்துடன் ருசியாக இருப்பதற்கு ஒரு ஸ்பூன் வறுத்த வெந்தய பொடியையும், 2 ஸ்பூன் கடலை மாவையும் அரை கப் நீரில் கரைத்து கடைசியாக குழம்பில் சேர்த்து கொதிக்க விட மணமும் ருசியும் கூடும்.
சில சமயம் கருணைக்கிழங்கை சமைக்கும்போது காரல் சுவையுடன் தொண்டையை அரிக்கும். இதற்கு கருணைக் கிழங்கை சிறிது புளிக்கரைசலில் வேகவைத்து மசித்து மசியல், கூட்டு என செய்து அசத்தலாம். தேங்காய் சேர்த்து பொரியல் கூட செய்யலாம்.
தக்காளி சாதம், லெமன் சாதம், பிரியாணி போன்றவற்றை குக்கரில் செய்யும் பொழுது மூடியைத் திறந்தவுடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றை விட்டு கிளறிவிட சாதம் குழையாமல் உதிரியாக இருப்பதுடன், மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.
ஆப்பம் செய்யும்பொழுது 2 ஸ்பூன் அவல் மற்றும் 1 கரண்டி தயிரை சேர்த்து அரைத்து செய்ய ஆப்பத்தில் சுவை அதிகரிப்பதுடன் மிகவும் மிருதுவாகவும் இருக்கும்.
கேசரி செய்யும்பொழுது விடும் தண்ணீரின் அளவை குறைத்துக் கொண்டு அதற்கு பதில் பால் சேர்த்து செய்ய சுவையும் மணமும் கூடும்.
சமைக்கும்பொழுது கையை சுட்டுக்கொண்டாலோ அல்லது தாளிக்கும்பொழுது எண்ணெய் அல்லது கடுகு தெறித்தாலோ அந்த இடத்தில் உடனடியாக சிறிது வெண்ணையைத் தடவிவிட எரிச்சல் குறைவதுடன் வடுவும் சீக்கிரம் ஆறிவிடும்.
காய்கறிகள் நிறைய வாங்கி விட்டீர்களா? ஃப்ரிட்ஜில் வைக்க இடம் இல்லையா? கவலையை விடுங்கள். ஒரு அகலமான தட்டில் வாங்கிய காய்கறிகளை அடுக்கி வைத்து அதன் மீது ஈரத் துணியை போட்டு மூடி வைக்கவும். காலை, மாலை இரண்டு வேளையும் அந்தத் துணியை தண்ணீரில் நனைத்துப் பிழிந்து விட்டு காய்கறிகளை மூடிவைக்க மூன்று நாட்கள் ஆனாலும் காய்கறிகள் வாடாமல் பிரஷ்ஷாக இருக்கும்.
உளுத்தம் பருப்பை வாசனை வரும் வரை வறுத்து அத்துடன் தேங்காய்், உப்பு, மாங்காய் துண்டுகள் (அ) புளி சிறிது, காரத்துக்கு மிளகாய் தூளுக்கு பதில் மிளகு சேர்த்து சட்னி அரைக்க சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம், டிபன் ஐட்டங்களுக்கும் ஒத்துப் போகும்.
பூரிக்கு மாவு பிசையும் பொழுது சின்ன வெங்காயம் 6, மிளகாய் 2, கறிவேப்பிலை சிறிது, பூண்டு 4 சேர்த்து மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்து பூரி மாவில் கலந்து பூரி செய்ய மிகவும் ருசியாக இருக்கும்.