ரசம் ரஸமாய் இருக்க சில ஐடியாஸ்..!

ரசம்
ரசம்www.youtube.com
Updated on

வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் ரசம் சாதம் வைத்து கொடு என்பார்கள். அதிகம் சாப்பிட முடியவில்லை என்றாலும் ரசம் சாதம் போதும் என்பார்கள். அப்படியெல்லாவற்றிலும் முன்னணியில் இருக்கும் ரசத்தை சுவையாய் வைப்பதற்கு சில ஐடியாக்களை  இப்பதிவில் காண்போம். 

புளியை அரிசி களைந்த தண்ணீரில் ஊற போட்டு, பிழிந்து அதில் ரசம்  வைத்தால் நன்றாக இருக்கும். 

சுடுதண்ணீரில் புளியை ஊற வைத்தால் சீக்கிரமாக புளித்தண்ணீர் கிடைக்கும். 

புளி குறைவாக போட்டு செய்தால் ரசம் அருமையாக இருக்கும். 

தக்காளியை வதக்கி மிளகு சீரகத்துடன் அரைத்து சேர்த்தாலும் ரசம் சூப்பரா இருக்கும்.

தாளிக்கும்போது இஞ்சித்துருவல், கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்தால்  ரசம் மணக்கும்.

கொஞ்சம் முருங்கைக்கீரை சேர்த்து வதக்கி ரசம் வைத்தால் நல்ல வாசனையாக இருக்கும். 

முருங்கைக்கீரை உருவிய பிறகு அதன் காம்புகளை சுத்தம் செய்து ரசத்தில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் மூட்டுகளுக்கு நல்ல பலம் கிடைக்கும். 

முருங்கை பிஞ்சு மற்றும் பிஞ்சு காய்கறிகளை பொடியாக நறுக்கி ரசத்தில் போட்டு கொதிக்க வைத்தாலும் ரசம் ருசிக்கும். 

கற்பூரவள்ளி இலை, வெற்றிலை ,துளசி இலைகள், புதினா போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை பொடிதாக நறுக்கி ரசத்தில் போட்டு கொதிக்க வைத்தாலும் மூலிகை ரசம் ருசிக்கும். 

சின்ன வெங்காயத்துடன் பூண்டு பற்களை நசுக்கிப் போட்டு தாளிதம் செய்து ரசம் வைத்தாலும் ரசம் அருமையாக இருக்கும்.

புளி ரசம் வைக்கும் பொழுது சிறிதளவு வெல்லக்கட்டியை சேர்த்தால் அருமையாக இருக்கும்.

எந்த வகை ரசமாக இருந்தாலும் புளிப்பு குறைவாக இருந்தால் சிறிதளவு எலுமிச்சைச் சாறு பிழிந்து விடலாம். புளிப்பை சமன்  செய்து ரசத்தின் ருசியை அதிகரித்துக் காட்டும். 

சுண்டல் வேக வைத்த தண்ணீர், பட்டாணி வேக வைத்த தண்ணீர் போன்றவற்றிலும் மிளகு, சீரகம் தட்டிப் போட்டு ரசம் வைத்து ருசிக்கலாம். உடம்புக்கு நல்ல சத்து கிடைக்கும். 

 ரசம்...
ரசம்...

தேங்காய் பாலில் ரசம் வைத்து அருந்தலாம். வித்தியாசமான சுவையில் அசத்தும். 

காய்கறிகள் வெந்த தண்ணீரை எடுத்து ரசம் வைக்கலாம். ருசி அபாரமாக இருக்கும். 

நெல்லிக்காயை துருவி சேர்த்து ரசம் வைக்கலாம். அதேபோல் மாங்காயின் வெள்ளைப்பகுதியை துருவி சேர்த்தும் ரசம் வைக்கலாம். அந்தந்த சீசனில் அப்படி பயன்படுத்தினால் உடம்புக்கு தேவையான சத்து கிடைக்கும். 

சாம்பார் பொடி ரசப் பொடி இரண்டையும் சமமாக கலந்து, தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, சின்ன வெங்காயம், கருவேப்பிலை, அரைத்துப் போட்டு ரசத்தில் கொதிக்க வைத்து பரிமாறி பாருங்கள் டேஸ்ட்டாக இருக்கும். 

இதையும் படியுங்கள்:
சிவராத்திரிக்கு சிவாலய ஓட்டம்! எங்கே, எப்படி நடக்கிறது தெரியுமா?
ரசம்

அன்னாசி, ஆரஞ்சு, நாரத்தை, எலுமிச்சை, புளிப்பான திராட்சை பழச்சாறுகளை எடுத்தும் ரசம் வைக்கலாம். 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான ரசம் வைத்து சாப்பிட்டால் செரிமான சக்தி சிறப்புடன் செயல்படும். தேவையற்ற வாயுக்கள் வயிற்றிலிருந்து நீங்கிவிடும். பெருமளவில் வயிற்று உபாதைகளை வராமல் தடுத்துவிடும்.

logo
Kalki Online
kalkionline.com