குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டத்துக்கு ஆயத்தமாகும் பக்தர்கள்!
மகா சிவராத்திரியை ஒட்டி, வரலாற்று சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் குமரியில் இன்று மதியம் தொடங்குகிறது.
110 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சிவாலய ஓட்டத்தில் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்கின்றனர்.
சிவபெருமானுக்கு உகந்த சிவராத்திரி நாளில் அவரது அருள் வேண்டி இந்த மாவட்டத்தில் உள்ள பன்னிரண்டு சிவாலயங்களுக்கும் பக்தர்கள் ஓட்டமாக சென்று வழிபடுவது சிவாலய ஓட்டமாகும்.
முன் சிறை அருகே திருமலை மகாதேவர் ஆலயத்தில் இருந்து தொடங்கி திக்குறிச்சி மகாதேவர், திற்பரப்பு வீரபத்திரர், திரு நதிக்கரை நந்தீஸ்வரர், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர், திருப்பன்னிப்பாக்கம் மகாதேவர், கல்குளம் நீலகண்ட சாமி, மேலங்கோடு மகாதேவர், திருவிடைக்கோடு மகாதேவர் ,திருப்பன்றி கோடு மகாதேவர் ,திரு நட்டாலம் சங்கரநாராயணர் ஆகிய 12 சிவாலயங்களுக்கு பக்தர்கள் ஓட்டம் மேற்கொள்வர்.
சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் மாசி மாதம் ஏகாதசி நாளில் மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். விரத நாட்களில் அவர்கள் பகல் நேரத்தில் கருக்கும் நுங்கும் இரவு நேரத்தில் துளசி இலையும் தண்ணீரும் உணவாக உட்கொள்கின்றனர் வேக வைத்த பதார்த்தங்கள் எதுவும் சாப்பிடுவதில்லை இவர்கள் காலை மாலை வேலைகளில் குளித்து சிவன் ஆலயங்களில் சென்று சிவ நாமங்களை உச்சரித்து பிரார்த்தனை செய்கின்றனர். சைவ வகை உணவுகளை மட்டுமே உண்கின்றனர் .சிவராத்திரி தினத்திற்கு முந்தைய நாளில் காவி உடை தரித்து கையில் விசிறியுடன் கோபாலா கோவிந்தா என்ற நாம கோஷத்துடன் சிவாலய ஓட்டத்தில் முதல் ஆலயமான திருமலை மகாதேவர் ஆலயத்தில் இருந்து தொடங்கி ஒவ்வொரு ஆலயமாக ஓடி சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
ஓட்டத்தில் பங்கேற்போர் ஆலயங்களில் உள்ள குளங்களில் நீராடி விட்டு ஆலயங்களுக்குள் செல்ல வேண்டும் என்பதும் கையில் வைத்திருக்கும் விசிறியால் சுவாமிக்கு வீசவேண்டும் என்பதும் ஐதீகம்.
சிவாலய ஓட்டத்தின் முதல் கோவிலான முன்சிறை மகாதேவர் ஆலயத்தில் சந்தனமும், ஓட்டம் நிறைவடையும் திருநட்டாலம் சங்கர நாராயணர் ஆலயத்தில் வீபூதியும் பிரசாதமாக வழங்கப்படுகிறது திருநட்டாலமாலயத்தில் சுவாமி சிவன் விஷ்ணு என சங்கர நாராயணராக எழுந்தருளி உள்ளது இது சைவ வைணவ ஒற்றுமையை பறைசாற்றுவதாக உள்ளது.
இந்த ஆண்டு சிவராத்திரி தினம் மார்ச் எட்டாம் தேதியாக உள்ள நிலையில் மாவட்டத்தில் சிவாலயங்களுக்கு நடந்தும் ஓட்டமாகவும் பக்தர்கள் இன்று (மார்ச் 7ஆம் தேதி) பிற்பகலில் தொடங்கி மார்ச் 9ஆம் தேதி அதிகாலையில் நிறைவு செய்கின்றனர்.
சிவாலய ஓட்டத்தில் பங்குபெறும் பக்தர்களுக்கு இளைப்பாறுவதற்கான வசதியும், மோர் சுக்குநீர் மற்றும் கஞ்சி பாயசத்துடன் சாதம் உள்ளிட்ட உணவுகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.