
* முள்ளங்கியை துருவி எடுத்து, கோதுமை மாவோடு கலந்து தேவைக்கேற்ப மிளகாய், உப்புடன் சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து சப்பாத்தி செய்தால், சுவையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.
* வெண்மையாக உள்ள அடர்த்தியான காலிபிளவர் வாங்கி, சிறு துண்டுகளாக நறுக்கி சூடான நீரில் போட்டு ஊறவைத்து எடுத்து, வடிகட்டி, ஒரு துண்டில் பரப்பி நிழலில் உலர்த்தினால், புழுக்கள் இருக்காது.
* புழுங்கல் அரிசி, பச்சரிசி இவற்றுடன் உளுந்தம் பருப்புக்கு பதிலாக, துவரம் பருப்பு சிறிது கலந்து வெந்தயம் சேர்த்து, அரைத்து தோசை வார்த்தால், தோசை மொறுமொறுப்பாக இருக்கும்.
* பக்கோடாவுக்கு கடலை மாவு அளவில் பாதி அளவு பொட்டுக்கடலை மாவும், சிறிது ரவையும் கலந்து செய்தால், பக்கோடா மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.
* மைசூர் பாக் செய்யும்போது கடலை மாவுடன் பயத்த மாவு கலந்து கொண்டால் சுவையாகவும் இருக்கும். வாய்வும் குறையும்.
* பழைய சாதத்துடன் அரிசி மாவு, உளுந்து மாவு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துப் பிசைந்து, போண்டா செய்தால் மொறுமொறுப்பாக, சுவையாக இருக்கும்.
* கோதுமையை கழுவி காயவைத்து மாவு அரைத்து சப்பாத்தி செய்தால், மிருதுவாக இருக்கும். நன்றாக உப்பி வரும்.
* இட்லி, தோசை மாவு பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் மாவினால் கழுவினால், பாத்திரங்கள் பளிச்சென்று இருக்கும்.
* தனியாவை சிறிது வறுத்து, பொடி செய்து வைத்துக்கொண்டால், சாம்பார் செய்யும்போது இந்த பொடியைப் போட்டு மூடி வைத்தால், சாம்பார் கம கம என்று மணக்கும்.
* எலுமிச்சை சாறு தரையில் சிந்தி வெள்ளையாக மாறி இருந்தால், பூசணிக்காயை நறுக்கி, அந்த இடத்தில் தேய்த்தால் கறை மறைந்து விடும்.
* இட்லி மிளகாய் தூள் தயாரிக்கும்போது, கறிவேப்பிலை, மிளகாய், பருப்புகள் ஆகியவற்றை தேங்காய் எண்ணெயில் வறுத்தால், பொடி நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.
* தோசை வார்ப்பதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்தினால், தோசை கல்லில் ஒட்டாமல் வரும். எண்ணெய் செலவும் குறையும். உடலுக்கும் நல்லது.
* இட்லி மாவு மீந்துவிட்டால் மாவை ஃப்ரிட்ஜில் வைப்பதை விட, ஹாட் பாக்சில் போட்டு வைத்தால், மாவு அதிக நேரம் புளிக்காமல் அதே பக்குவத்தில் இருக்கும்.
* சேமியா பாயசத்தில் முந்திரி பருப்பு, கிஸ்மிஸ் போடுவதுபோல், முற்றிய தேங்காயை நறுக்கி நெய்யில் வறுத்துப்போட்டால், சுவையும், மணமும் கூடும்.
* பாகற்காய்களை துண்டுகளாக நறுக்கி வைத்துவிட்டால், பழுக்காமல் இருக்கும்.
* இட்லி மிளகாய் பொடியில் கொள்ளு தானியத்தையும் வறுத்து, பொடித்துச் சேர்த்தால், சுவையாகவும் இருக்கும். வாய்வு பிரச்னையும் வராது.