
பிஸிபேளாபாத் ஐட்டத்தை அநேகர் அரிசியை உபயோகித்துதான் செய்வது வழக்கம். டேஸ்ட்டியாக இருக்கும். ஆனால், ஜடா பொஹாவை உபயோகித்து செய்யப்படும் பிஸிபேளாபாத், சத்து நிரம்பியதாகவும், வித்தியாசமாகவும், டேஸ்ட்டியாகவும் இருக்கும். எப்படி செய்வதென்று பார்க்கலாமா..?
தேவை:
* ஜடா பொஹா (கெட்டியான அவல் 1 கப்)
* பாசிப்பருப்பு 1/2 கப்
* கேரட் 1
* குடமிளகாய் 1
* வெங்காயம் 2
* பூசணிக்காய் 100 கிராம்
* பச்சைப் பட்டாணி 1/2 கப்
* பெங்களூர் கத்தரிக்காய் 100 கிராம்.
* மஞ்சள் பொடி 1/2 டீஸ்பூன்
* புளி ஒரு எலுமிச்சம்பழம் அளவு
* பெருங்காயப் பொடி 1/4 டீஸ்பூன்
* கடுகு 1/2 டீஸ்பூன்
* சீரகம் 1/2 டீஸ்பூன்
* மெந்தியம் 1/2 டீஸ்பூன்
* தனியா 2 டீஸ்பூன்
* சிகப்பு மிளகாய் 4
* கடலைப் பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு 1 டீஸ்பூன்
* எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
* நெய் 1 டேபிள் ஸ்பூன்
* ஃப்ரெஷ் கறிவேப்பிலை கொஞ்சம்
* உப்பு தேவையானது
* தண்ணீர் தேவையானது
செய்முறை:
முதலில் ஜடா பொஹாவை தண்ணீர்விட்டு களைந்து, பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும்.
பாசிப்பருப்பையும் சுத்தம் செய்து ஊறவைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த சிகப்பு மிளகாய், மிளகு, தனியா, மெந்தயம் ஆகியவைகளைப் போட்டு சிவக்க வறுத்துக் கொண்டு ஆறவிடவும். பின்னர் மிக்ஸியிலிட்டு பொடி செய்து கொள்ளவும். மசாலாப்பொடி ரெடி.
பூசணிக்காய், பெங்களூர் கத்தரிக்காய், கேரட், வெங்காயம் ஆகியவைகளின் தோல் சீவி நறுக்கிக்கொள்ளவும். குடமிளகாயை கட் செய்து வைத்துக்கொள்ளவும். புளியைக் கரைத்துக் கொள்ளவும்.
குடமிளகாய், வெங்காயம் இவைகளை வதக்கி வைத்துக் கொள்ளவும்.
ஊறவைத்த பாசிப்பருப்புடன். மஞ்சள் பொடி, மற்றும் நறுக்கி வைத்திருக்கும் கறிகாய்கள், பச்சைப் பட்டாணி (குட மிளகாய், வெங்காயம் தவிர்த்து) புளிக்கரைசல், தேவையான உப்பு, தண்ணீர், பெருங்காயப்பொடி ஆகியவைகளை சேர்த்துக் கொதிக்கவிடவும்.
கொதிக்கையில், மசாலாப்பொடி, வதக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் குடமிளகாயைப் போட்டு, ஊறவைத்திருக்கும் ஜாடா பொஹாவை பிழிந்து சேர்த்து கிளறிவிடவும்.
கடுகு-சீரகம், கருவேப்பிலை ஆகியவைகளை நெய்யில் தாளித்து பரவலாக மேலே போட்டு மிக்ஸ் செய்து சாப்பிடுகையில் கம-கமவென்ற வாசனையுடன், செம டேஸ்ட்டாக இருக்கும் இந்த சத்து நிறைந்த "ஜடா பொஹா பிஸிபேளாபாத்", அனைவருக்கும் பிடித்த ஹெல்த்தி ஐட்டமாகும்.