

இப்போது நாம் இருப்பது ரெடிமேட் உலகம். எல்லாமே instant delivery என்பதாலும், செய்ய சோம்பேறித்தனம் படுவதாலும், நாம் ருசியற்ற சக்கை உணவைத்தான் சாப்பிடுகிறோம்.
ஆனால் கிராமத்தில் உள்ள எங்கள் பாட்டி வீட்டில் போய் சாப்பிட்டால், அவர்கள் கைப்பக்குவத்தில் வைக்கும் குழம்பின் ருசி காரசாரமாக செம்மையாக இருக்கும். டேஸ்ட் தூக்கலாக இருப்பதால் சாப்பாட்டை ருசித்து ரசித்து சாப்பிடும் உணர்வைத்தூண்டும்.
“என்னதான் உங்களுடைய குழம்பு ரகசியம்? இப்படி மணக்குதே!” என்று எங்கள் பாட்டியைக் கேட்டபோதுதான் தெரிந்தது. அவர்கள் யூஸ் பண்ணும் மிளகாய் பொடியில்தான் அந்த சீக்ரெட் இருக்கிறது என்று சொன்னார்கள்.
இதோ அந்த சீக்ரெட் உங்களுக்கும்! இது மட்டும் செய்து பாருங்கள்; உங்கள் வீட்டுக் குழம்பும் ஊரே மணக்கும்.
குழம்பு மிளகாய்த்தூள்
தேவையான பொருட்கள்:
காம்பு நீக்கிய குண்டு மிளகாய் வற்றல் – 1 கிலோ
சீரகம் – ¼ கிலோ
கொத்தமல்லி விதைகள் – ½ கிலோ
மிளகு – 100 கிராம்
வெந்தயம் – 50 கிராம்
கட்டிப் பெருங்காயம் – 100 கிராம்
கறிவேப்பிலை – 2 கொத்து
செய்முறை:
முதலில் குண்டு மிளகாயை நன்கு வெயிலில் காயவைத்து எடுத்து, ஒரு பையில் போட்டு கைகளால் பொடி செய்து வைக்கவும்.
கறிவேப்பிலையை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி, பின்னர் லேசாக வறுத்து எடுத்து வைக்கவும்.
மீதமுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக தனித்தனியாக சிவக்கும் வரை வறுத்து எடுக்கவும். வறுத்த பொருட்களை நன்கு ஆறவைக்கவும்.
உலர்த்திய மற்றும் வறுத்த எல்லா பொருட்களையும் சேர்த்து மிஷினில் கொடுத்து நன்கு அரைத்துக்கொள்ளவும். அரைத்த மிளகாய்த்தூளை எடுத்து தரையில் நியூஸ்பேப்பர் போட்டு ஒரு நாள் முழுவதும் ஆறவிடவும்.
ஒரு பஞ்சுத்திரியை நெய்யில் நனைத்து தீ பற்றவைத்து, அது அணைந்த பின் வரும் புகையில் மிளகாய்த்தூள் சேமித்து வைக்கும் பாத்திரத்தை கவிழ்த்து வைத்து இரண்டு நிமிடம் கழித்து எடுத்தால், நெய் வாசனை அந்த பாத்திரத்தில் ஊறி வரும். அதன் பிறகு மிளகாய்த்தூளை சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
பராமரிப்பு குறிப்புகள்:
காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
தேவையானபோது கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துப் பயன்படுத்தி, மீண்டும் பத்திரமாக மூடி வைக்கவேண்டும்.
ஈரக் கைகளால் எடுக்கக்கூடாது.
இந்த முறையில் மிளகாய்த்தூளை சேமித்து வைத்தால் இரண்டு ஆண்டுகள் ஆனாலும் பூச்சி பிடிக்காமல் இருக்கும்.