Bachelors வேலைக்கு அவசரமாக கிளம்பும்போது என்ன உணவு செய்யலாம் என்று குழம்புவது சகஜம். சிலர் கடையில் வாங்கி சரியாக சாப்பிடாமல் வேலை செய்வார்கள். இனி அந்த கவலையே இல்லை. சாதம் மட்டும் வடித்தால் போதும் ஐந்தே நிமிடங்களில் எளிதாக இந்த சாதத்தை செய்துவிடலாம்.
தேவையானப் பொருட்கள்:
2 டீஸ்பூன் நெய்
2 டீஸ்பூன் எண்ணெய்
அரை டீஸ்பூன் கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, வேற்கடலை.
ஆறு பல் பூண்டு,
வர மிளகாய்
ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள்
அரை டீஸ்பூன் சீரகத்தூள்
கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள்
அரை டீஸ்பூன் உப்பு
வடித்த சாதம்
செய்முறை:
முதலில் மிதமாக அடுப்பை எரியவிட்டு, ஒரு பாத்திரத்தில் இரண்டு டீஸ்பூன் நெய் மற்றும் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். நெய் வேண்டாம் என்றால் நான்கு டீஸ்பூன் எண்ணெயும் சேர்த்துக் கொள்ளலாம்.
இப்போது அரை டீஸ்பூன் அளவு கடுகு, உளுந்து, சீரகம், கடலை பருப்பு, வேர்கடலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.
அதனுடன் நசுக்கிய பூண்டு, சின்னதாக வெட்டி வைத்த வரமிளகாய் (விதையில்லாமல்), கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து, பூண்டு பொன்னிறமான பின்னர் அடுப்பை நிறுத்திவிட வேண்டும்.
பிறகு எடுத்து வைத்த சீரகத்தூள், பெருங்காயத்தூள், மிளகாய் தூள் ஆகியவை சேர்த்து ஒரு 30 வினாடிகள் கிளற வேண்டும்.
இறுதியாக வடித்து வைத்த சாதத்தை ஒரு 4 கைப்பிடி எடுத்து அந்த மசாலாவுடன் சேர்த்து கிளற வேண்டும்.
அவ்வளவுத்தான் ஐந்தே நிமிடங்களில் சுவையான கார சாரமான கார சோறு ரெடி.