
சம்மர் காலம் வரப்போகுது. இப்போதே வடாம், வற்றல், ஊறுகாய் செய்து தயாரித்து வைத்துக் கொண்டால் மழை காலத்தில் அவசரத்துக்கு கை கொடுக்கும்.
1. கொத்தவரங்காய் வற்றல் செய்ய தேவையானது.
கொத்தவரங்காய் - அரை கிலோ
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு -தேவைக்கு
கொத்தவரங்காய் வற்றல் செய்முறை.
கொத்தவரங்காயை மணி நீக்கிவிட்டு அலசி அடி வாழ்வு அளவுக்கு தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும் கொத்தவரங்காய் நன்கு வெந்ததும் இறக்கி நீரை நன்றாக வடித்து விட்டு வெயிலில் ஒரு வெள்ளை துணியில் தனித்தனியாக பிரித்து காய விடவும். நன்றாக காய்ந்த பின் எடுத்து வைக்கவும். இதை எண்ணெயில் பொரித்து ரசம் சாதம், மோர் சாதத்துக்கு ஏற்றது. குழம்பிலும் போடலாம் ஆரோக்கியமானது.
2. வெண்டைக்காய் வற்றல் செய்ய தேவையானது.
வெண்டைக்காய் - ஒரு கிலோ
தயிர் -ஒரு கப்
உப்பு தேவைக்கு
வெண்டைக்காய் வற்றல் செய்முறை
பிஞ்சு வெண்டைக்காய் பார்த்து வாங்கி ஒரு அங்குல துண்டுகளாக வெட்டி, வெயிலில் துணியில் தனித் தனியாக காய வைக்கவும். மாலையில் தயிரில் உப்பு சேர்த்து இந்த வெண்டைக்காய்களை போட்டு கலந்து, மூன்று நான்கு நாட்கள் ஊற வைக்கவும். பின்னர் வெயிலில் தனித்தனியாக துணியில் காய விட்டு எடுத்து வைக்கவும். இதை எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம். குழம்பிலும் போடலாம் ருசியாக இருக்கும்.
3. கத்தரிக்காய் வற்றல் செய்ய தேவையானது.
கத்தரிக்காய் - கால் கிலோ
புளி தண்ணீர் - சிறிது
மஞ்சள் தூள் -ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கு
கத்தரிக்காய் வற்றல் செய்முறை.
கத்திரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு நாள் வெயிலில் காய வைக்கவும். இதனுடன் புளித்தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து கொஞ்ச நேரம் கொதிக்க விடவும். வெந்ததும் நீரை வடித்து திரும்பவும் இரண்டு நாட்கள் வெயிலில் காய வைத்து எடுக்கவும்.
4. கோவக்காய் வத்தல் செய்ய தேவையான பொருட்கள்.
கோவக்காய் - 1/2 கிலோ
உப்பு - தேவைக்கு
மிளகாய்தூள் - சிட்டிகை.
தயிர்- 1/4 கப்.
கோவக்காய் வத்தல் செய்முறை.
கோவக்காயை வட்டமாக நறுக்கி அதில் 1 ஸ்பூன் உப்பு , மிளகாய்த்தூள் கலந்து ஒரு நாள் இரவு ஊற விடவும். மறுநாள் பிளாஸ்டிக் ஷீட்டில் தனியாக ஒட்டாமல் போட்டு வெயிலில் காய வைத்து எடுக்கவும். இரவில் ஊற வைத்த தயிரில் மீண்டும் போட்டு அடுத்த நாள் வெயிலில் ஷீட்டில் காய வைத்து மூன்று நாட்கள் இது மாதிரி காய வைத்து எடுத்து, காய்ந்த பின் எண்ணெயில் பொரித்து எடுக்கவும் மொறு மொறுவென இருக்கும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. சாதத்துக்கு தொட்டு சாப்பிட ருசியாக இருக்கும்.
வெயில் காலத்தில் அனைத்தும் செய்து வைத்துக் கொள்ளவும்.