நவீன காலத்தில் பலரும் சப்பாத்தி, நாண் சாப்பிடுவதை அதிகமாக விரும்புகின்றனர். அதிலும் பட்டர் நாண், சீஸ் நாண், தந்தூரி நாண் என வகைவகையான நாண் இருக்கையில் நாணை விரும்பாததவர்கள் யாரும் இல்லை. அப்படிப்பட்ட இந்த நாணை செய்ய ஓவன் அல்லது தந்தூரி அடுப்பு தேவைப்படுகிறது. எனவே தான் மக்கள் இதனை உணவகங்களுக்கு சென்று வாங்கி சாப்பிடுகின்றனர்.
இருப்பினும், இந்த நாணை வீட்டிலேயே மிகவும் சுலபமாக செய்யலாம் தெரியுமா? இதற்கு ஓவனோ அல்லது தந்தூரி அடுப்போ தேவையில்லை. வீட்டில் இருக்கும் தவாவை வைத்தே செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
மைதா -1 கப்
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
சர்க்கரை - 1/4 டீஸ்பூன்
தயிர் - 1/4 கப்
வெஜிடபிள் ஆயில் - 1 தேக்கரண்டி
சூடான நீர் - தேவையான அளவு
வெண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு
நறுக்கிய கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு
நறுக்கிய பூண்டு - சிறிதளவு
செய்முறை:
* ஒரு பாத்திரத்தில், மைதா, பேக்கிங் சோடா, உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
* பிறகு அதில் தேவையான அளவு எண்ணெய் மற்றும் தயிர் சேர்த்து மீண்டும் கலக்க வேண்டும்.
* இப்பொது சூடான தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து மாவை நன்கு பிசைய வேண்டும். மாவு கையில் ஒட்டாதவரை நன்கு பிசைந்துக் கொள்ளுங்கள்.
*மேலும், மாவு மிருதுவாக தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றிக்கொள்ளலாம்.
* மாவு கலவையை தயாரித்ததும் அதன் மேற்பரப்பில் சிறிது எண்ணெய் தடவி 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு மாவினை சிறிது சிறிதாக உருட்டி சப்பாத்தி தேய்ப்பது போல தேய்த்துக்கொள்ளுங்கள்.
* நீங்கள் மிகவும் அடர்த்தியான நாணை உருட்ட வேண்டாம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
* இப்பொது ஒரு தவாவை சூடாக்கி, அதில் நாணை இருபுறமும் திருப்பிவிட்டு சமைக்க வேண்டும்.
* நாணில் குமிழிகள் வர ஆரம்பித்தவுடன் நாணை மிதமான தீயில் நேரடியாக காட்டி ஒரு நிமிடம் சமைக்க வேண்டும்.
* இதையடுத்து இரு பக்கங்களிலும் நெய் அல்லது வெண்ணெய் தடவி, அதன்மேல் கொத்தமல்லி மற்றும் பொடிப்பொடியாக நறுக்கிய பூண்டினை சேர்த்துக்கொள்ளவும்.
* பின்னர் உங்களுக்கு விருப்பமான கிரேவி வைத்து நாணை சாப்பிடுங்கள்.