

தக்காளி சாதம் அனைவருக்கும் பிடித்தமான உணவு. கோவில், பயணங்களின் போதும் வளைகாப்பு ஆகிய விசேஷ நிகழ்வுகளின் போதும் விரும்பி செய்யப்படும் உணவு தக்காளி சாதமே! தக்காளி உடலுக்கு ஆரோக்கியமான காய்கறி. இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. லைகோபீன் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து உள்ளதால் இவை ஆரோக்கியத்தை மேம்படுத்தி இதயநோய் அபாயத்தை குறைக்கிறது.
சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது. சுவை மிகுந்த கமகமக்கும் தக்காளி சாதம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அரிசி - 250 கிராம்
தக்காளி - 150 கிராம்
வெங்காயம் - 25 கிராம்
பச்சை மிளகாய் - 3
புதினா - ஒரு கைப்பிடி அளவு
மல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு
கருவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
தயிர் - 4 டீஸ்பூன்
இஞ்சி,பூண்டுவிழுது-தேவையான அளவு
பிரியாணி மசாலா - தேவையான அளவு
எண்ணெய் - 7 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பட்டை,கிராம்பு,சோம்பு,கடல்பாசி, பிரிஞ்சி இலை,ஏலக்காய்- தேவையான அளவு
நெய் - 4 டீஸ் ஸ்பூன்
செய்முறை:
அரிசியை நன்கு கழுவி 30 நிமிடங்கள் ஊறவைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். அடிகனமான குக்கரில் தேவையான அளவு எண்ணெய், நெய் விட்டு பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, சோம்பு, கடல்பாசி, ஏலக்காய் நன்கு பொரிந்து வரும் வரை வறுக்கவேண்டும். தக்காளி சாதத்திற்கு நெய் சேர்ப்பது மிகுந்த சுவையை கொடுக்கும். பின் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசிந்து வரும் வரை வதக்கிக்கொள்ள வேண்டும். இவை நன்கு வெந்து வந்தவுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். அதனுடன் புதினா, மல்லித்தழை, கருவேப்பிலை , தயிர் தேவையான அளவு உப்பு, பிரியாணி மசாலா சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கிக்கொள்ள வேண்டும்.
இதனுடன் தேவையான அளவு நீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவேண்டும். நீர் நன்கு கொதித்து வந்தவுடன் ஊற வைத்திருந்த அரிசியும் சேர்ந்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். குக்கரில் மூன்று விசில் வரும் வரை காத்திருக்கவும். குக்கரில் பிரஷர் அடங்கியவுடன் அரிசி உடையாத அளவிற்கு மெதுவாக கிளறிகொள்ள வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் கமகமக்கும் தக்காளி சாதம் தயார்.