

மாறிவரும் வாழ்க்கை முறையும் உணவுப் பழக்கமும் பலவித நோய்களை உண்டாக்குகின்றன. நாம் மறந்துபோன மருத்துவ மற்றும் ஆரோக்கிய உணவுகள் சிலவற்றை இங்கு காணலாம்.
ஆவாரம் பூ பொடி இட்லி:
இது பாரம்பரியமான மற்றும் ஆரோக்கியமான தென்னிந்திய உணவாகும். ஆவாரம் பூவின் மருத்துவ குணங்களை வழக்கமான இட்லியுடன் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் இது சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ என்ற தமிழ் பழமொழி ஆவாரம் பூவின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் திறனை வலியுறுத்துகிறது.
இட்லி மாவு 2 கப்
பொடி தயாரிக்க:
உலர்ந்த (அ) புதிய ஆவாரம் பூ 2 கப் கடலைப்பருப்பு 4 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 2 ஸ்பூன்
மிளகு 1 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 6
உப்பு தேவையானது
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் மூன்றையும் சேர்த்து நன்கு சிவக்க வறுத்தெடுக்கவும். பிறகு மிளகு, சீரகத்தையும் வெறும் வாணலியில் நன்கு வறுத்து எடுத்துக்கொள்ளவும். ஆவாரம் பூவையும் வாணலியில் லேசாக வறுத்தெடுக்கவும். கடைசியில் வறுத்த பொருட்கள் அனைத்துடனும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். ஆவாரம் பூவை நேரடியாக இட்லி மாவில் சேர்ப்பதில்லை. மாறாக அவற்றை இவ்வாறு பொடி செய்து வைத்துக் கொண்டு இட்லி மாவில் கலந்து இட்லி வார்க்க சத்தான மற்றும் சுவையான இட்லி தயார்.
இந்த ஆவாரம் பூ பொடியை இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். பொடி இட்லி செய்யவும் பயன்படுத்தலாம். இட்லி பொடியாகவும் நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு குழைத்து தொட்டு சாப்பிடலாம்.
பூசணி இட்லி:
இட்லி மாவு 2 கப்
வெள்ளை பூசணி பெரிய துண்டு
உப்பு தேவையானது
வெள்ளைப் பூசணியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும். அதனை மிக்ஸியில் போட்டு தேவையான உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும். இதனை இட்லி மாவில் கலந்து இட்லி வார்க்க பஞ்சு போன்ற இட்லி கிடைக்கும். தொட்டுக்கொள்ள புதினா சட்னி அல்லது கொத்தமல்லி சட்னி தோதாக இருக்கும்.
வெள்ளைப் பூசணி உடம்பில் தேவையில்லாமல் சேர்ந்திருக்கும் நீரை வெளியேற்றுவதுடன், பெண்களுக்கு ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும். பித்தத்தை தணிக்கும் தன்மை கொண்டது.
அத்திக்காய் பருப்பு கூட்டு:
அத்திக்காய்
பயத்தம் பருப்பு
காய்ந்த மிளகாய்
பூண்டு
வெங்காயம்
மிளகாய் தூள்
உப்பு
தாளிக்க: கடுகு, நல்லெண்ணெய், கறிவேப்பிலை
வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டு, கறிவேப்பிலையும் சேர்த்து கடுகு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், நசுக்கிய பூண்டு, துண்டுகளாக நறுக்கிய அத்திக்காய் சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும்.
வெந்த காயில் நன்கு குழைவாக வெந்த பயத்தம் பருப்பையும், மிளகாய் தூளையும் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். இதனை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.