
மேத்திக்கீரை பூரி செய்வதில் எக்ஸ்பெர்ட்டான என்னுடைய மராத்தி ஃப்ரெண்ட் தனுஜாவிடம், அதன் ரெஸிபியை கேட்கையில், அவள் கூறிய ரெசிபி விபரம் இதோ:
ஸ்பெஷல் மேத்திக்கீரை (வெந்தயக்கீரை) பூரி
தேவை:
மேத்திக்கீரை (வெந்தயக்கீரை) 1 கட்டு
கோதுமை மாவு 200 கிராம்
கடலைமாவு 100 கிராம்
வெங்காயம் 2
பூண்டு 2 பருப்பு
இஞ்சி 1 சிறு துண்டு
சீரகம் 1 டீ.ஸ்பூன்
மிளகாய்ப்பொடி 1 டீஸ்பூன்
கரம் மசாலா பொடி 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி 1 சிட்டிகை
உப்பு தேவையானது
ரீஃபைன்டு ஆயில் 1/2 லிட்டர்
தயிர் 2 டீஸ்பூன்
தண்ணீர் தேவையானது
செய்முறை:
முதலில், மேத்திக் கீரையை நன்றாக அலம்பி, இலைகளை ஆய்ந்தெடுத்து பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
கோதுமை மாவு மற்றும் கடலைமாவை சலித்தெடுத்துக்- கொள்ளவும். இவைகளை வாயகன்ற ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது உப்பு, எண்ணெய், தயிர் சேர்த்து மிக்ஸ் செய்த பின், தேவையான தண்ணீரை விட்டு நன்றாகப் பிசைந்து வைத்து, மேலே மெல்லிய துணி கொண்டு மூடவும்.
வெங்காயத்தைத் தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பூண்டு மற்றும் இஞ்சியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இவைகளை வாணலியிலிட்டு லேசாக வதக்கி எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்தெடுத்துக் கொள்ளவேண்டும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கேஸ் ஸ்டவ்வின் மீது வைத்து சூடானதும், சீரகத்தைப் போட்டு வெடிக்க விடவும். இதில், அரைத்த வெங்காய விழுதைப்போட்டு வதக்கிய பிறகு, மஞ்சள்பொடி, கரம் மசாலா, மிளகாய்ப் பொடி, சிறிது உப்பு மற்றும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் மேத்திக் கீரையை ஆகியவைகளைச் சேர்த்து நன்றாக வதக்கவும். கீரை வெந்ததும், எல்லாவற்றையும் நன்றாக மசித்தெடுத்துக் கொள்ளவும். அடுப்பை அணைத்துவிடவும். மேத்திக்கீரை கலவையை ஆறவிடவும்.
பிசைந்து வைத்திருக்கும் மாவுடன், மேத்திக்கீரை கலவையைச் சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு பூரிகளாக இட்டு வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், இட்டு வைத்திருக்கும் மேத்தி பூரிகளை நான்கு - நான்காக மெதுவாக போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். மேத்தி பூரியைச் சுடச் சுட சாப்பிடுகையில் செம டேஸ்ட்டாக இருக்கும். சுவையான ஸ்பெஷல் மேத்திக்கீரை பூரிக்குத் தொட்டுக்கொள்ள சைட் டிஷ் தேவையில்லை.
ஸஃபேத் எல்ச்சி அல்வா
தேவை:
நல்ல சஃபேத் எல்ச்சிப் பழம் 6
சர்க்கரை 2 கப்
சலித்த ரவை 1 கப்
உலர் திராட்சை 15
முந்திரிப் பருப்பு 10 (ஒன்றிரண்டாக ஒடித்துக் கொள்ளவும்)
ஏலப் பொடி 1/2 டீஸ்பூன்
கேசரிப் பவுடர் 1 சிட்டிகை
நெய் 2 கப்
தண்ணீர் தேவையானது
செய்முறை:
முதலில், வாணலியில் சிறிது நெய் விட்டு கேஸ் ஸ்டவ்வின் மீது வைத்துக் காய்ந்ததும், ஒடித்து வைத்திருக்கும் முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை ஆகியவைகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்தெடுத்துக் கொள்ளவும். பின்னர், ரவையையும், வாணலியில் போட்டு வறுத்துக்கொள்ளவும்.
சபேத் எல்ச்சியை தோல் நீக்கித் துண்டுகள் போட்டு, மிக்ஸியிலிட்டு ஒரு திருப்புத் திருப்பி எடுத்துக் கொள்ளவும்.
அடிக்கனமான பாத்திரம் ஒன்றை கேஸ் அடுப்பின் மீது வைத்து, ஒரு கிண்ணம் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். வறுத்து வைத்திருக்கும் ரவையை இதில் மெதுவாக போட்டு வேகவிடவும். முக்கால் பகுதி வெந்த பின், சர்க்கரை, கேசரிப் பவுடர், நெய் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து மீண்டும் வேகவிடவும்.
எல்லாம் ஒன்று சேர்ந்து வருகையில், ஒன்றிரண்டாக அரைத்து வைத்திருக்கும் சஃபேத் எல்ச்சி பழத்தைப் போட்டு நன்றாக கிளறவும். பிறகு, வறுத்து வைத்திருக்கும் முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ், ஏலபொடி சேர்த்து மிக்ஸ் செய்தபின், பாத்திரத்தை அடுப்பிலிருந்து கீழே இறக்கவும்.
ஸஃபேத் எல்ச்சி அல்வாவை, சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள்.