பொதுவாக நாம் வீடுகளில் அவசரத்துக்கு தொட்டுக் கொள்ள தொக்கு என்ற ஊறுகாய் வகைகளே உதவும். அந்த ஊறுகாய் வகைகள் புதுமையாக இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா?. தற்போது நாட்டு கொத்தமல்லி எனப்படும் மணம் வீசும் சிறு அளவிலான இந்த கொத்தமல்லித்தழையில் ஊறுகாய் அல்லது தொக்கு போட்டு வைத்துக் கொள்ளுங்கள். தோசை, சப்பாத்திக்கும், தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ள வித்தியாசமான மணத்துடன் வெகு அற்புதமாக இருக்கும் இந்த கொத்தமல்லி தொக்கு வாருங்கள். எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையானவை:
கொத்தமல்லித் தழை - இரண்டு பெரிய கட்டு
பச்சை மிளகாய் வர மிளகாய்- தலா ஆறு( அவரவர் காரத்திற்கேற்ப)
நல்லெண்ணெய் - நான்கு டேபிள் ஸ்பூன் வெல்லம்- பெரிய நெல்லிக்காய் சைஸ்
புளி - சிறு உருண்டை
பெருங்காயம் - சிறிது
கடுகு உளுந்து - தாளிக்க
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
கொத்தமல்லித் தழையை வாங்கியதும் பிரித்து அதில் உள்ள புல் போன்ற தேவையற்ற களைகளை எடுத்துவிட்டு நன்கு கழுவி வடிகட்டி அரிந்து வைத்துக் கொள்ளுங்கள் .இதனுடன் மிளகாய்கள், புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் இட்டு நன்கு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். (தேவையான நீரை மட்டும் ஊற்றிக் கொள்ளுங்கள்) அதிக நீர் தேவையில்லை.
இப்போது ஒரு அடி கனமான இரும்பு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கருவேப்பிலை கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து அரைத்து வைத்துள்ள இந்த கொத்தமல்லி கலவையை அதில் ஊற்றுங்கள். நன்கு கொதித்து பச்சைவாசை வாசனை அடங்கும் வரை கொதிக்க வையுங்கள். (மேலே தெளிக்கும்.கவனம்) எண்ணெய் பிரிந்து வரும்போது எடுத்து வைத்துள்ள வெல்லத்தை பொடித்து அதில் சேருங்கள். (காரம் அவரவர்களுக்கு தேவைப்படும் அளவுக்கு போட்டுக் கொள்ளலாம்).
மிதமான தீயில் வைத்து ஓரளவு கெட்டியானதும் பெருங்காயம் சேர்த்து மேலே எண்ணெய் மிதக்கும் அளவுக்கு மீண்டும் சிறிது நல்லெண்ணையை ஊற்றி விட்டு அடுப்பில் இருந்து இறக்கவும். பிறகு அதை எடுத்து ஆறியதும் சுத்தமான (நீரற்ற) துடைத்த பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும் . இந்த தொக்கு ஒரு மாதம் இரண்டு மாதம் வரையில் கூட கெடாமல் இருக்கும் . புளியும் அவரவர் தேவைக்கு சேர்த்துக் கொள்ளலாம். விலை மலிவாக கிடைக்கும்போது இந்த கொத்தமல்லி தொக்கை போட்டு வைத்துக் கொண்டால் ஊறுகாய்க்கு பதில் இது நாக்கிற்கு சுவை தரும் உங்களுக்கு பாராட்டுகளுடன்.